சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்ட மங்கி பாக்ஸ்! அறிகுறி என்ன! எப்படி பரவும்.. டிரீட்மென்ட் என்ன
டெல்லி: மங்கி பாக்ஸ் பாதிப்பை உலக சுகாதார அமைப்பு பொதுச் சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ள நிலையில், அந்த நோய் குறித்து பார்க்கலாம்.
Recommended Video
மங்கி பாக்ஸ் என்பது கோவிட்-19 போல புதிய வகை வைரஸ் பாதிப்பு இல்லை. அது ஏற்கனவே ஆப்பிரிக்க நாடுகளில் பரவலாக எண்டமிக் நோயாகவே இருந்து வந்தது.
ஆனால், இப்போது தான் அவை முதல்முறையாக ஆப்பிரிக்காவுக்கு வெளியே இந்தளவுக்குப் பரவ தொடங்கி உள்ளது. இதற்கான காரணம் ஆய்வாளர்களுக்கே தெரியவில்லை.
கேரளாவில் மற்றொரு நபருக்கு மங்கி பாக்ஸ்.. உயிருக்கு ஆபத்தானதா.. எப்படி பரவும்? அறிகுறிகள் என்ன
மங்கி பாக்ஸ்
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்தே உலக நாடுகள் இப்போது தான் மெல்ல மீண்டு வருகிறது. கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பில் இருந்து மீளவே இன்னும் சில ஆண்டுகளாவது ஆகும் எனச் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் மங்கி பாக்ஸ் பாதிப்பு உலக நாடுகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தடுக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்படு வருகிறது.
60 நாடுகள்
ஆர்த்தோபாக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரசால் மங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்படுகிறது. பொதுவாக ஆப்பிரிக்காவில் மட்டுமே இருக்கும் இந்த பாதிப்பு இப்போது இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி உள்ளது. உலகெங்கும் இருக்கும் சுமார் 60 நாடுகளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர்களில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.
அவசர நிலை
மங்கி பாக்ஸ் அதிகரித்து வரும் நிலையில், உலக சுகாதார மைய ஆய்வாளர்கள் இது தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தினர். மங்கி பாக்ஸ் பாதிப்பு, பரவல் ஆகியவை குறித்து அதில் ஆலோசிக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளுக்கும் இந்த மங்கி பாக்ஸ் பரவி உள்ள நிலையில், இதைச் சர்வதேச பொதுச் சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்து உள்ளது. கொரோனா பெருந்தொற்றாக மாறும் முன்பு, அதுவும் அவசர நிலையாகவே அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தடுக்க முடியும்
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், "மங்கி பாக்ஸ் பாதிப்பு பொதுச் சுகாதார அவசர நிலையைத் தான் காட்டுகிறது. சரியாகத் திட்டமிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்தால் மங்கி பாக்ஸ் பாதிப்பை நம்மால் தடுத்து நிறுத்த முடியும். பொதுச் சுகாதார அவசர நிலையாக அறிவிப்பதன் மூலம் உலக நாடுகள் ஒன்றாகச் செயல்பட்டு வைரஸ் பாதிப்பைத் தடுக்க முடியும்" என்றார்.
அறிகுறி
சுகாதார அவசர நிலையாக மங்கி பாக்ஸ் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அது எப்படிப் பரவும், அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பது போன்ற கேள்விகள் நமக்குள் எழும். பொதுவாக மங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களின் உடலில் அம்மை பாதிப்பில் ஏற்படுவதைப் போலக் கொப்புளங்கள் ஏற்படும். இது தான் மங்கி பாக்ஸின் முக்கிய அறிகுறியாகும். மேலும், காய்ச்சல், தசைவலி, சளி ஆகியவையும் ஏற்படும்.
எப்படி பரவும்
இது கொரோனாவை போல எளிதாகப் பரவாது என்பது ஒரு நல்ல செய்தியாகும். மங்கி பாக்ஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் உடன் நீண்ட நேரம் நேருக்கு நேர் தொடர்பில் இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். மேலும், மங்கி பாக்ஸால் நோயாளிகளின் உடலில் இருந்து வெளியேறும் நீர்த் துளிகள் மூலம் வைரஸ் பாதிப்பு பரவும் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், இதுவரை மங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்பட்ட பெரும்பாலான நபர்கள் இருபாலின உறவு கொள்பவர்களாகும் ஆண்களுடன் உறவு கொள்ளும் ஆண்களாகவுமே இருந்துள்ளனர்.
சிகிச்சை முறை
தற்போது வரை இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பிற்குக் குறிப்பிட்ட சிகிச்சை என்று எதுவும் இல்லை. நோயாளிகள் மருத்துவமனையில் தனிமையில் இருக்க வேண்டும். இதன் மூலம் வைரஸ் பரவல் தடுக்கப்படும். மேலும், அவர்களுக்கு ஏற்படும் பொதுவான அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். மங்கி பாக்ஸ் பாதிப்பு பொதுவாக 15 நாட்களில் குணமடைந்துவிடும்.