இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு தடையா? கட்டுப்பாடுகள் வருமா? பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் விளக்கம்
டெல்லி: கிரிப்டோகரன்சியை தடை செய்ய மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கிரிப்டோ கரன்சி குறித்து எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சர் மேற்குறிப்பிட்ட பதிலை அளித்துள்ளார்.
கிரிப்டோகரன்சி என்பது ஒரு நாணயத்தின் டிஜிட்டல் வடிவமாகும். இது, நாணயம் அல்லது நோட்டு போன்ற தொட்டு உணரும் வடிவத்தில் உங்கள் கையில் இருக்காது. இது முழுவதும் இணையத்தில் இருக்கும். எந்த சட்டவிதிகளும் இல்லாமல் இதன் மூலம் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதை அரசோ, ஒழுங்குமுறை அதிகார அமைப்போ வழங்குவதில்லை. டிஜிட்டல் கரன்சி காரணமாக இணைய மோசடிகள் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக, இவ்விவகாரத்தை மத்திய ரிசர்வ் வங்கி அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.

2018 ஆம் ஆண்டில், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை ஆதரிக்கும் விஷயத்தில், வங்கிகள் மற்றும் முறைப்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு RBI தடைவிதித்தது. ஆனால், 2020 மார்ச் மாதத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் ரிசர்வ் வங்கியின் தடைக்கு எதிராக தீர்ப்பளித்தது. 'இந்த விஷயத்தில் எந்த ஒரு முடிவெடுப்பதற்கும் அரசு சட்டத்தை உருவாக்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்தியா தனக்கென ஒரு கிரிப்டோகரன்சி மற்றும் அதன் புழக்கம் தொடர்பான வழிவகைகளை ஆராய்ந்து வருவதாக ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு மார்ச் மாதம் கூறியது. இந்த நாணயம் இந்தியாவில் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது அரசின் எதிர்கால முடிவு குறித்த தொலைநோக்குபார்வை நிர்ணயிப்பதாக இருக்கும்.
இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கிரிப்டோ கரன்சி குறித்து திருமாவளவன் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த கிரிப்டோ கரன்சியை தடை செய்ய ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளதாகவும், இதை கட்டுப்படுத்த தகுந்த சட்டத்தை இயற்றவும் ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளதாகவும் கூறினார். மேலும் கிரிப்டோகரன்சி தொட்டு உணரும் வடிவிலான பணம் அல்ல என்பதையும் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் எந்த ஒரு பணத்தையும் ரிசர்வ் வங்கிதான் அறிமுகம் செய்யும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
அதேபோல இந்த கிரிப்டோகரன்சிகள் நாட்டின் பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது குறித்து ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரிசர்வ் வங்கி தனது சொந்த டிஜிட்டல் கரன்சியை வெளியிடுவது குறித்து தற்போது வரை எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. இது நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் உள்ளது. எனவே அனைவரின் கவனமும் கிரிப்டோகரன்சியை நோக்கி நகர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications