மகாத்மா காந்திக்காக ஓடி வந்த உலக தலைவர்கள்.. டெல்லி ராஜ்காட்டில் மரியாதை! சால்வை அணிவித்த மோடி
டெல்லி: ஜி20 மாநாட்டில் பங்கேற்க வருகை தந்துள்ள உலக நாடுகளின் தலைவர்கள் தலைநகர் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.
நேற்று தலைநகர் டெல்லியில் தொடங்கிய ஜி 20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த உலக நாடுகளின் தலைவர்கள், இன்று காலையிலேயே மகாத்மா காந்தி நினைவிடமான ராஜ்காட்டிற்கு வந்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்விற்காக ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தின் திரையுடன் மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

அதில் நின்றுகொண்டு இருந்த பிரதமர் நரேந்திர மோடி, மேடையில் ஏறி வரும் ஒவ்வொரு தலைவருக்கும் கதர் துணியால் தயாரிக்கப்பட்ட சால்வையை அணிவித்து சபர்மதி ஆசிரம படத்தை காட்டி விளக்கம் கொடுத்து உள்ளார். இதில் அனைத்து நாடுகளின் தலைவர்களும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதற்கிடையே நேற்று இரவு முதல் டெல்லியில் கனமழை பெய்து வந்த நிலையில் இன்று காலை மழை நின்றதால் இந்த நிகழ்ச்சி நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது. ஜி 20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நேற்று டெல்லியில் நேற்று தொடங்கி உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மனி பிரதமர் ஏன்செலா மெர்கல், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான், வங்கதேச பிரதமர் சேக் ஹசீனா ஐநா தலைவர் ஆண்டோனியோ குட்டரஸ், உலக வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்டவற்றின் தலைவர்கள் பங்கேற்று உள்ளார்கள்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தோனோசியா தலைநகர் பாலியில் ஜி20 நாடுகளின் 17 வது உச்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் இந்தியாவுக்கு ஜி 20 நாடுகள் குழுவின் தலைமை பதவி வழங்கப்பட்டது. இந்த குழுவில் இருக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் ஆண்டுதோறும் தலைமை பதவி வழங்கப்பட்டு வருகிறது. தலைமை பதவியேற்கும் அந்த நாட்டில் அந்த ஆண்டு ஜி 20 மாநாடு நடைபெறும்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜி 20 மாநாடு டெல்லியில் தொடங்கி உள்ளது. மாநாட்டின் முதல் நாளான நேற்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, உலகத் தலைவர்களுக்கு சிறப்பு விருந்து அளித்தார். முன்னாள் பிரதமர்கள், மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், வெளிநாட்டு துாதர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications