தர்மபுரிக்கு வண்டியை விட்ட எடப்பாடி பழனிசாமி! பஞ்சமியில் வராஹி வழிபாடு! தோல்வி கூட தோற்று விடுமாம்!
தருமபுரி : வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு அஷ்ட வராஹி அம்மன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சாமி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி தானப்ப கவுண்டர் பள்ளி வளாகத்தில் ஸ்ரீ அஷ்ட வராஹி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதற்காக கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், காலையில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்யக் குவிந்தனர்.
ஆடி வளர்பிறை பிரதோஷம்... சிவ ஆலயங்களில் கோலாகலம் - பக்தர்கள் வழிபாடு
வராஹி அம்மன் கோவில்
இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் உபகார பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வழிபாட்டையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி
இதனிடையே இந்த கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. இந்த வழிபாட்டில் எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
உற்சாக வரவேற்பு
முன்னதாக சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு காரிமங்கலத்தில் அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க தலைவர்கள் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
என்ன சிறப்பு
வராஹி வழிபாடு மேற்கொண்டால் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. குறிப்பாக பஞ்சமி திதி அமாவாசை மற்றும் ஜாதகத்தில் லக்னத்திற்கு குரு ஆறாம் இடத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று பிறந்தவர்கள் வராஹி வழிபாடு மேற்கொள்ளும் போது தோல்வி கூட தோற்றே விடும் என்கின்றனர். தற்போது அதிமுகவில் அடுத்தடுத்து சிக்கல்களை சந்தித்து வரும் எடப்பாடி பழனிச்சாமி பயம் தெளிந்து மனதில் துணிச்சல் தைரியம் தன்னம்பிக்கை பிறக்க வழிபாடு மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.