குவாரி தொழிலாளர்கள் மீது தாக்குதல்.. கைதான அதிமுக நிர்வாகிக்கு நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் கல்குவாரி தொழிலாளர்களை தாக்கிய புகாரில் கைதான அதிமுக நிர்வாகி தனக்கு நெஞ்சுவலி எனக்கூறி மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
திமுகவுக்கு தாவிய 3 அதிமுக ஒன்றியச் சேர்மன்கள்; கோட்டைவிட்ட தங்கமணி; பின்னணி என்ன?
அதிமுக விவசாய அணியின் மாநில தலைவராகவும், தருமபுரி மாவட்ட ஆவின் கூட்டுறவு சங்க தலைவராகவும் இருந்து வரும் டி.ஆர்.அன்பழகன் கைது செய்யப்பட்ட நிலையில், நெஞ்சுவலி எனக்கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்குவாரித் தொழிலாளர்களான சுரேஷ், முத்துவேல் ஆகியோரை கடத்திச் சென்று தாக்கியதாக அன்பழகன் மீது புகார் எழுந்துள்ளது
கல்குவாரி தொழிலாளர்கள் மீது தாக்குதல்
அதிமுக விவசாய அணியின் மாநில தலைவராகவும், தருமபுரி மாவட்ட ஆவின் கூட்டுறவு சங்க தலைவராகவும் இருந்து வருபவர் டி.ஆர்.அன்பழகன். இவர் வசிப்பது தாளப்பள்ளம் பகுதியில். அவருக்கென சொந்தமாக கல்குவாரிகள் உள்ளன. இந்நிலையில் கல்குவாரித் தொழிலாளர்களான ஜல்மாரம்பட்டியை சேர்ந்த சுரேஷ், முத்துவேல் ஆகியோரை கடத்திச் சென்று சரமாரியாக தாக்கியதாக அன்பழகன் மற்றும் அவரது உதவியாளர்கள் மீது புகார் எழுந்தது.
உதவியாளர்கள் முதலில் கைது
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் தந்த புகாரில் அன்பழகனுக்கு உதவியதாக மகேந்திரன், முருகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆட்கடத்தல் வழக்கில் அன்பழகனுக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது.
திடீர் நெஞ்சு வலி
இதையடுத்து டி.ஆர். அன்பழகனை பென்னாகரம் போலீசார் கைது செய்தனர். போலீசார் கைது செய்த சில நிமிடங்களிலேயே தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி அங்கேயே அமர்ந்துவிட்டார். இதையடுத்து அன்பழகன் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஜட்ஜ் விடவில்லை
அன்பழகன் நெஞ்சு வலி என படுத்துக்கொண்டாலும் பென்னாகரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் நேராக அன்பழகன் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரிக்கே வந்துவிட்டார். இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்தார் அன்பழகன். இதுமட்டுமின்றி டி.ஆர். அன்பழகனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
சேலம் மருத்துவமனையில் அனுமதி
ஆனாலும் நெஞ்சுவலி என அன்பழகன் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்க வேறு வழியின்றி அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அதே சமயம் அப்பகுதியில் வசிக்கும் எதிர்க்கட்சித் தரப்பினர் போலீசாரின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்கத்தான் டி.ஆர்.அன்பழகன் நெஞ்சுவலி என நாடகம் ஆடுவதாக கூறினர்