பாரத மாதா நினைவிட பூட்டு உடைப்பு வழக்கு - பாஜக பிரமுகர் கேபி ராமலிங்கம் சேலம் சிறையில் அடைப்பு!
தருமபுரி : தருமபுரி பாப்பாரப்பட்டியில் பாரத மாதா நினைவாலயத்தின் பூட்டை உடைத்த வழக்கில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Recommended Video
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு மணி மண்டப வளாகத்தில் உள்ள பாரத மாதா நினைவாலயத்திற்கு, கடந்த வியாழக்கிழமை பாஜக சார்பில், அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவிக்க சென்றனர். அப்போது நினைவாலயம் பூட்டு போடப்பட்டிருந்தால், நினைவாலயத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதுதொடர்பாக நினைவு மண்டப காப்பாளர் சரவணன், பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம், தருமபுரி மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கத்தை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள அவரது வீட்டில், கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து பரிசோதித்தனர். அப்போது அவர் தனக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாகக் கூறினார். இதையடுத்து தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இ.சி.ஜி., மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, மருத்துவக் குழுவினர் கே.பி.ராமலிங்கத்திற்கு சிகிச்சை அளித்தனர்.

இதனிடையே, பென்னாகரன் மாஜிஸ்திரேட் எம்.பிரவீனா, சேலம் அரசு மருத்துவமனைக்கு திங்கள்கிழமை மாலை நேரில் வந்தார். அப்போது, மருத்துவர்களிடம் கே.பி.ராமலிங்கத்திற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விசாரித்தார். பின்னர் கே.பி.ராமலிங்கத்திடமும் மருத்துவர்கள் அளித்து வரும் சிகிச்சை குறித்து விசாரித்தார். பின்னர் கே.பி.ராமலிங்கத்தை வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரது உடல் நலம் குறித்த விரிவான அறிக்கை காவல் துறை அதிகாரிகள் மருத்துவமனையில் இருந்து பெற்றனர். இதைத்தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கத்தை, போலீஸார் இன்று சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications