தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.. சொல்கிறார் பாஜக அண்ணாமலை
தருமபுரி: தமிழகத்தில் பெண் போலீஸார் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக துணை பொதுச் செயலாளரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் பெண் போலீஸாரிடம் சில்மிஷத்தில் திமுக நிர்வாகி ஈடுபட்டது குறித்த விஷயத்தில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு எம்பிக்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வு இறுதிக்கட்டத்திற்கு வந்தபோது 129 ஆவது வட்ட இளைஞர் அணியை சேர்ந்த இருவர், பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. திமுகவினரை கைது செய்க.. கொந்தளித்த அண்ணாமலை.. ஆதரவாக வந்த குஷ்பு!
மடக்கி பிடித்த போலீஸ்
அவர்களை போலீஸார் மடக்கி பிடித்த போது பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்த கட்சியினர் போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மேடையில் இருந்த திமுக எம்எல்ஏ பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் என கூறியதை அடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் எச்சரித்து அனுப்பிவிட்டனர்.
பெண்ணுக்கு அநீதி
இந்தியாவில் எந்த மூலையில் எந்த பெண்ணுக்கு எதிராக அநீதி நடந்தாலும் அதை எதிர்த்து குரல் கொடுக்க முன்வரும் கனிமொழியின் கூட்டத்திலேயே திமுகவினர் இப்படி அநாகரீகமாக நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பாஜகவின் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம் (அப்போது பாஜகவில் இருந்தார்), கவுதமி ஆகியோரை சைதை சாதிக் மிகவும் மோசமான வார்த்தைகளால் பேசியிருந்த போதே இதை கண்டித்து குஷ்பு போட்ட ட்வீட்டிற்கு கனிமொழி பதிலளித்திருந்தார்.
மன்னிப்பு கேட்ட கனிமொழி
அதில் தான் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்திருந்தார். இப்படியொரு நிலையில் கனிமொழி விழாவிலேயே பெண்ணை திமுக நிர்வாகி சில்மிஷம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதுகாப்பு தருவதுதான் திராவிட மாடல் ஆட்சி என திமுக பொதுக் கூட்டத்தில் கனிமொழி பேசியிருந்தார். அது போல் எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்திற்கு கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. இந்த நிலையில் அண்ணாமலையும் விமர்சித்துள்ளார்.
ஏரி குளங்களில் நிரப்ப வலியுறுத்தி பொதுக் கூட்டம்
காவிரி உபரி நீரை, ஏரி மற்றும் குளங்களில் நிரப்ப வலியுறுத்தி தருமபுரியில் பாஜக சார்பில் நேற்று இரவு நடந்த பொதுக் கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: கடந்த இரு நாட்களுக்கு முன்பு திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் பெண் போலீஸாரிடம் திமுகவினர் சில்மிஷம் செய்துள்ளார்.
கைது செய்யவில்லை
அவர்களை போலீஸார் கைது செய்ய முடியாத நிலை உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் பெண் போலீஸார் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். நாட்டில் எங்கு பிரச்சினை என்றாலும் பேட்டி கொடுக்கும் கனிமொழி, முதல்வராக உள்ள தன் சகோதரர் ஸ்டாலினிடம் பெண் போலீஸை சில்மிஷம் செய்த திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவில்லை.
கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி குறித்தும் பொய்யான தகவல்களை பரப்பினர். ஆனால் பூஸ்டர் டோஸ் போட ஸ்டாலின், திருமாவளவன் முதல் ஆளாக வந்தனர். வரும் 2024 இல் தமிழகம், புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற வேண்டும் என அண்ணாமலை பேசியிருந்தார்.