காவிரியில் 50,500 கன அடிநீரை வெளியேற்றிய கர்நாடகா! ஒகேனக்கல் சுற்றுலா போக வேண்டாம் மக்களே!
தருமபுரி: காவிரி அணைகளில் இருந்து வினாடிக்கு 50,000 கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 22,000 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிக்கவோ, பரிசல்களை இயக்கவோ 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் கர்நாடகா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. காவிரி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கிருஷ்ணராஜ சாகர் அணை மிக வேகமாக நிரம்பி வருகிறது. காவிரியின் துணை நதியான கபிலா ஆற்றிலும் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் கபினி அணை நிரம்பிவிட்டது.

கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 45,000 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினியின் கீழ் அணையான நுகுவில் இருந்து 5,000 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது.
கர்நாடகாவின் அணைகளில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 50,500 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் தமிழ்நாட்டின் ஒகேனக்கல்லுக்கான காவிரி நீர் வரத்து 25,000 கன அடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு- கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர் வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர்.
ஒகேனக்கல்லுக்கு காவிரி நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்டவைகளில் பேரிரைச்சலுடன் காவிரி நதி பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் தரைப்பாலத்தை தாண்டி காவிரி வெள்ளம் பாய்ந்தோடுகிறது. பாறைகளில் பெருக்கெடுத்தோடும் அருவிகளை கண்டு ரசிப்பதற்கான பரிசல்கள் இயக்கம் 3-வது நாளாக இன்றும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 300க்கும் மேற்பட்ட பரிசல் ஓட்டிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் வினாடிக்கு 21,000 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1,000 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications