மனுஷங்க இல்லாமலேயே தர்மபுரியில் வரவேற்பு! மக்களுக்கு "உலோகம்" சர்ப்ரைஸ்! கலெக்டரின் மாஸ்டர் பிளான்
சென்னை: தர்மபுரி மாவட்டத்தில் ஜனநாயகம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் இணைக்கும் வகையில் நடைபெற்று வரும் "கிரீன் தேர்தல்" முன்னெடுப்புகள் வாக்காளர்களிடையே பெரும் வியப்பையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளன. நவீன தொழில்நுட்பமான ரோபோக்கள் மூலம் முதல்முறை வாக்காளர்களை வரவேற்று, அவர்களுக்கு பசுமைப் பரிசுகளை வழங்கி மாவட்ட நிர்வாகம் அசத்தி வருகிறது. ஓட்டுப்போடும் நாளில் அதென்ன ரோபோக்கள்?
கடந்த 9ம் தேதி புதுச்சேரியில் தேர்தல் நடைபெற்றது.. அப்போது வாக்குச்சாவடியில் வாக்காளர்களை வரவேற்க மனிதர்களுக்குப் பதிலாக 'நிலா' என்ற அதிநவீன ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டு அனைவரையும் கவர்ந்தது.

தாவணி அணிந்து வந்த நிலா
தாவணி அணிந்த பாரம்பரிய தோற்றத்துடன் கைகளில் ரோஜா பூக்களை தாங்கி வந்த நிலா, வாக்குப்போட வந்தவர்களுக்கு இன்முகத்துடன் வரவேற்பு அளித்தது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தெளிவாக பேசும் திறன் கொண்ட இந்த ரோபோ, வாக்காளர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கி, முதியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் இதனுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். முழுமையாக மென்பொருள் மூலம் கட்டுப்படுத்தப்படும் இந்த ரோபோ, தேர்தல் சூழலை இனிமையாக்கியதுடன், சமூக வலைதளங்களில் வைரலானது நினைவிருக்கலாம். இப்போது இதே பாணி, நம்முடைய தர்மபுரி மாவட்டத்திலும் வாக்குச்சாவடியில் புகுத்தப்பட்டுள்ளது..

தர்மபுரி மாவட்ட சர்ப்ரைஸ்
தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் (தனி) என மொத்தம் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை மாவட்டத்தில் மொத்தமாக 12,52,019 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 6,29,980 பேரும், பெண் வாக்காளர்கள் 6,21,887 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 152 பேரும் அடங்குவர்.
வாக்காளர்கள் எவ்விதத் தடையுமின்றி வாக்களிக்க ஏதுவாக 957 இடங்களில் மொத்தம் 1,596 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளில் சுமார் 6,500 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கலெக்டரின் மாஸ்டர் பிளான்
பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொறுத்தவரை, மாவட்டத்தில் 150 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு அசம்பாவிதங்களை தவிர்க்க காவல்துறை, மத்திய பாதுகாப்புப் படை மற்றும் துணை ராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தேர்தல் நடைமுறைகள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்த தேர்தலின் சிறப்பம்சமாக தர்மபுரி அடுத்த எரப்பட்டி வாக்குச்சாவடியில் பிரத்யேகமான "கிரீன் மற்றும் பிங்க்" மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்திற்குத் தனது குடும்பத்தினருடன் வருகை தந்த மாவட்ட தேர்தல் அலுவலர் சதீஷ், வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். அங்கு அமைக்கப்பட்டிருந்த நவீன ரோபோக்கள், முதல்முறை வாக்காளர்களை இன்முகத்துடன் வரவேற்று அவர்களுக்குப் பூக்கள் மற்றும் இனிப்புகளை வழங்கியது காண்போரைக் கவர்ந்தது.
அதுமட்டுமின்றி, வாக்களிக்கத் தேவையான ஆவணங்கள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பற்றிய சந்தேகங்களுக்கும் இந்த ரோபோக்கள் விளக்கம் அளித்து வருகின்றன.

வாக்காளர்களுக்கு ஆச்சரியம்
வாக்களித்து முடித்துவிட்டு வரும் முதல் தலைமுறை வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் "கிரீன் தேர்தல்" அடையாளமாக விதைப்பந்துகள், விதை பென்சில்கள் மற்றும் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்படுகின்றன.
தர்மபுரி மாவட்டத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ரோபோட்டிக் வரவேற்பு மற்றும் பசுமைப் பரிசுகள், இளம் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களிடையே வாக்குப்பதிவு குறித்த ஆர்வத்தை பன்மடங்கு அதிகரித்துள்ளது. தொழில்நுட்பமும் இயற்கையும் இணைந்த இந்தத் தேர்தல் அணுகுமுறை ஒரு முன்னோடி முயற்சியாகப் பார்க்கப்படுகிறது...!!












Click it and Unblock the Notifications