அபார்ஷன்கள்.. விஷம் குடித்து பெண் பலி.. 45 நிமிடம் உயிர் துடிப்பதை வேடிக்கை பார்த்த காதலன் குடும்பம்
தர்மபுரியில் காதலன் வீட்டு முன்பு காதலி தற்கொலை செய்து கொண்டார்
தர்மபுரி: உயிருக்குயிராக காதலித்து விட்டு, திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டு முன்பு, விஷம் குடித்து பெண் இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை தர்மபுரி மாவட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை ராஜகொல்லஅள்ளியை சேர்ந்தவர் ஞானமொழி.. 29 வயதாகிறது.. பி.டெக் படித்து பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார்.
தற்போது கொரோனா லாக்டவுன் என்பதால், வீட்டில் இருந்தபடி வேலை செய்து வந்தார்... இவரது உறவினர் முரளிதரன்.. குட்டூர் பகுதியை சேர்ந்தவர்.. 33 வயதாகிறது.. பிஇ படித்து விட்டு, ஒடிசாவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்கள் 2 பேரும் காதலித்து வந்துள்ளனர்... 13 வருட காதலாம் இது..

சம்மதம்
இந்நிலையில், முரளிதரனுக்கு அவரது வீட்டில் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்... இதற்கு முரளிதரனும் சம்மதித்துள்ளதாக தெரிகிறது.. இதையறிந்த ஞானமொழி, நேராக காதலன் வீட்டிற்கு சென்று விட்டார்.. தனக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.. ஆனால், அவர் பேச்சை அந்த வீட்டில் யாருமே மதிக்கவில்லை.. சரியாக பதிலும் சொல்லவில்லை..

போராட்டம்
அதனால், விரக்தி அடைந்த அவர், முரளிதரன் வீட்டின் முன்னாடியே விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்து பதறிபோன அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர்... இதையடுத்து அவரது உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய போலீசார் அனுப்பி வைத்து விசாரணையும் ஆரம்பித்தனர்.. ஆனால், ஞானமொழி சாவுக்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை சடலத்தை வாங்க மாட்டோம் என்று வலியுறுத்தி, உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்..

சமாதானம்
இதனால் பெரும் பரபரப்பு அங்கு ஏற்பட்டது.. தகவலறிந்து அதியமான்கோட்டை போலீசார், விரைந்து வந்து அவர்களிடம் புகாரை மனுவாக கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானம் செய்து சடலத்தை பெற வைத்தனர்... இறுதியில், இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக முரளிதரன், அவரது பெற்றோர் தங்கவேல், ராதாவை கைது செய்தனர்.. மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.

என்ன நடந்தது?
என்ன நடந்தது?... இவர்களுக்குள் 13 வருட காதலாம்.. எப்போது விடுமுறை என்றாலும் ஞானமொழியும், முரளிதரனும் வெளியே செல்வது வழக்கமாம்.. ஒன்றாக போட்டோ, வீடியோக்களை எடுப்பது, ரூம் போட்டு தங்குவது என்று நாட்களை கடத்தி வந்துள்ளனர்.. இதனால் 2 முறை ஞானமொழி கர்ப்பமடைந்து, அபார்ஷனும் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

கருத்து வேறுபாடு
திடீரென கருத்து வேறுபாடு வந்துள்ளது போலும்.. அதனால் கடந்த ஒரு வருடமாகவே இவர்களுக்குள் சரியாக பேசிக் கொள்ளாமல் இருந்துள்ளனர்.. இந்த சமயத்தில் வீட்டில் பெண் பார்க்கவும், முரளிதரனும் அதற்கு எதிர்ப்பு காட்டாமல் இருந்துள்ளார்.. அதனால்தான் ஞானமொழி அதிர்ச்சியுற்று, நேரடியாகவே அவர் வீட்டுக்கு சென்றுள்ளார். ஒருவேளை தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லையானால், அங்கேயே தற்கொலை செய்து கொள்வது என்று ஏற்கனவே முடிவெடுத்துவிட்டாராம்..

திருமணம்
அதனால், வீட்டிற்கு தெரியாமல் ஆன்லைனிலேயே விஷத்தை ஆர்டர் செய்து வாங்கி வைத்து கொண்டு, பிறகு முரளிதரன் வீட்டுக்கு சென்றுள்ளார்.. ஆனால், அவர் போன நேரம் முரளிதரன் அங்கு இல்லையாம்.. அதனால், அவரது பெற்றோரிடம் நியாயம் கேட்டுள்ளார்.. முரளிதரனை தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லையானால் இங்கேயே விஷமருந்திவிடுவேன் என்றும் சொல்லி உள்ளார்.

45 நிமிடம்
அதனையும் அக்குடும்பத்தினர் கண்டுகொள்ளவே இல்லையாம்.. நேராக உள்ளே போய் கதவை தாழிட்டு கொண்டதாகவும் தெரிகிறது. இதனால் விஷம் அருந்திய ஞானமொழி, வீட்டு வாசலிலேயே துடிதுடித்து கொண்டிருந்திருக்கிறார்.. இதை முரளிதரன் குடும்பத்தினர் ஜன்னல் வழியாக பார்த்து கொண்டே இருந்தனராம்.. 45 நிமிடத்துக்கும் மேலாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது..

கதறல்
அந்த பகுதி மக்கள்தான் ஞானமொழி உயிருக்கு போராடுவதை பார்த்து பதறி போய், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளனர்.. ஆனால், அதற்குள் உயிர் போய்விட்டது.. "இத்தனை பேரும் வேடிக்கை பார்த்திருக்கீங்களே.. என் மகள் உயிரை யாராவது ஒருத்தர் காப்பாத்தியிருக்கலாமே" என்று ஞானமொழியின் பெற்றோர் கதறி கதறி அழுதது காண்போரை கலங்க செய்தது..!












Click it and Unblock the Notifications