ஐ ஆம் வெரி ஹாப்பி ஸ்டார்ட் மியுசிக்! மலைவாழ் மக்களுடன் நடனமாடிய சூரி! ’விடுதலை’ சூட்டிங் உற்சாகம்..!
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் நடைபெற்று வரும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவரவுள்ள 'விடுதலை' படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள நடிகர் சூரி, அந்த பகுதியில் நடைபெற்ற ஊர் திருவிழாவில் கலந்துகொண்டு நடனமாடினார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'அசுரன்' படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் படத்திற்கு "விடுதலை" என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையத்துள்ள நிலையில் விடுதலை படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சத்தியமங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டது.

வெற்றிமாறனின் விடுதலை
இந்நிலையில் படத்தில் 4வது கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமமான சிறுமலையில் நடந்து வருகிறது. இதற்காக பிரம்மாண்டமாக மலைப்பகுதியிலேயே கிராமம் போன்ற செட் அமைக்கப்பட்டுள்ளது. நிஜ கிராமம் போலவே இந்த அரங்கத்தை அமைத்துள்ள நிலையில், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இங்கு விஜய் சேதுபதி பங்கேற்ற சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்போது சூரி உள்ளிட்டோர் நடிக்கும் காட்சிகள் படமாகி வருகின்றன.

நடிகர் சூரி
இதற்காக படக்குழுவை சேர்ந்த 450 பேர் சிறுமலை பகுதியில் தங்கியுள்ளனர். போலீஸ் வேடத்தில் நடிக்கும் நடிகர் சூரி குறித்த காட்சிகளும் அங்கு படமாக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கையில் துப்பாக்கியுடன் நடிகர், சூரியும் காட்டில் விஜய் சேதுபதியும் இருக்கும் புகைப்படங்கள் கவனம் ஈர்த்தன. நடிகர் சூரி மற்றும் பிற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஜூன் 10ஆம் தேதி வரை சிறுமலையில் நடைபெறவுள்ளன.

படப்பிடிப்பு தீவிரம்
சிறுமலை என்பது திண்டுகல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் உள்ள ஒரு மலைத் தொடர் ஆகும். சுமார் 25 கிமீ தூரம் உள்ள மலைத் தொடர் ஆகும். இது திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டியையும் இணைக்கிறது. அங்கு விஷப்பாம்புகள், காட்டெருமைகள், காட்டு நாய்கள் மற்றும் பூச்சிகளை கடந்து டீம் உறுப்பினர்கள் வனப்பகுதிக்குள் தொலைதூர இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதால், படப்பிடிப்பின் போது ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் மருத்துவ உதவியை வழங்க வேண்டும் என்பதற்காக மருத்துவருடன் கூடிய ஆம்புலன்ஸ் தயாராக உள்ளது.

உற்சாக நடனம்
இந்நிலையில் சிறுமலை கிராமத்தில் உள்ள கோவில் வைகாசி மாத திருவிழா நடைபெற்றது. இதனை கேள்விப்பட்ட நடிகர் சூரி படப்பிடிப்பில் இருந்து நேராக கோவில் திருவிழாவில் கலந்து கொண்டார். விழாவின் இறுதி நாளான இன்று அம்மன் பூஞ்சோலை செல்லுதல் எனும் மஞ்சத் தண்ணி திருவிழா நடைபெற்றது. அப்போது சிறுமலை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தாரை தப்பட்டைகள் முழங்க அம்மன் ஊர்வலத்தில் நடனம் ஆடினர். இதனை பார்த்து உற்சாகம் அடைந்த நடிகர் சூரி கிராம மக்களோடு மக்களாக இணைந்து உற்சாக நடனம் ஆடினார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications