ஓபிஎஸ்ஸ அசிங்கப்படுத்திட்டாங்க! அம்மா சாபம் விடாது! அரைக்கம்பத்தில் கொடி! எடப்பாடிக்கு எதிர்ப்பு!
திண்டுக்கல் : அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நடந்த களேபரங்களுக்கு மத்தியில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஓபிஎஸ்-க்கு ஆதரவாக, அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, அதிமுக கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென கூட்டத்தில் இருந்து பாதியிலேயே கிளம்பிச் சென்று விட்டார்.
அவர் செல்லும் போது, அவருடைய வாகனத்தை பஞ்சர் ஆக்கிய சிலர், அவரைத் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும், ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில்களை வீசியதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம்
முன்னதாக இந்தக் கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். மேலும், இபிஎஸ்-ஐ ஒற்றைத் தலைமையாக கொண்டுவர பொதுக்குழு உறுப்பினர்கள் விரும்புவதாக அறிவித்தார். இதனைக் கண்டித்து ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
இதனையடுத்து அதிமுகவில் உள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓபிஎஸ்க்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் , திண்டுக்கல், தேனி, ராமாநாதபுரம், தஞ்சை ஆகிய பகுதிகளில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஓபிஎஸ்-க்கு ஆதரவாக, அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, அதிமுக கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

எடப்பாடிக்கு எதிர்ப்பு
நிலக்கோட்டை அருகே மைக்கேல்பாளையத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், கிளைக் கழக துணைச் செயலாளர் சகாயம் தலைமையில், கிளைக் கழக பொருளாளர் எஸ்.சகாயராஜ் செயற்குழு உறுப்பினர்கள் மரிய மைக்கேல், அன்புரோஸ் மற்றும் முன்னாள் கிளைச் செயலாளர் லாரன்ஸ் ஆகியோர் அதிமுக கொடியை பிடித்தவாறு, நிலக்கோட்டை - செம்பட்டி சாலையின் ஓரத்தில் அமர்ந்து ஓபிஎஸ்க்கு ஆதரவாக கோஷம் போட்டனர்.

அரைக்கம்பத்தில் கொடி
அப்போது, ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓபிஎஸ் ஒற்றை தலைமைக்கு தலைமையை ஏற்க வேண்டும். அவரை தாக்க முயன்ற குண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை கண்டித்து நாங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம். அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விட்டு எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து உள்ளோம் என்று கூறினர். இந்த சம்பவம் நிலக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications