அதிமுகவை அடமானம் வைத்துவிட்டார்கள்.. டெல்லியிடம் இருந்து வேகமாக மீட்டால் நல்லது.. கி.வீரமணி அட்வைஸ்!
அதிமுகவை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டதாக கி.வீரமணி விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல்: அண்ணாவின் பெயரில் கட்சி ஆரம்பித்து அதிமுகவை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார். அதிமுகவும் திராவிடர் கழகம் தான் என்று கூறிய கி.வீரமணி, டெல்லியிடம் இருந்து அதிமுகவை எவ்வளவு விரைவாக மீட்கிறார்களோ, அதுதான் அனைவருக்கும் நல்லது என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதால், எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர் செல்வம் இணைந்தார்.
அதன்பின்னர் ஒற்றைத் தலைமை பிரச்சினை எழுந்து, உட்கட்சி பூசல் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்தது. இருப்பினும் இரு தரப்பும் பாஜகவின் ஆதரவைப் பெற தீவிரமாக முயற்சித்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நேரடியாக கமலாலயம் சென்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஆதரவு கோரினர்.

திராவிடர் கழகம் பொதுக்கூட்டம்
இது தமிழ்நாடு அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பாஜகவின் கைகளுக்குள் அதிமுக சென்றுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் திராவிடர் கழகம் சார்பில் திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி பேசுகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்தார்.

சமூகநீதி
'அனைவருக்கும் அனைத்தும்' என்ற அவரது தத்துவத்தை சொன்னார். இதுதான் சமூகநீதி. அதை எங்கெங்கோ படிக்க வேண்டும் என்ற தேவை இல்லை. பெண்கள் கல்லூரிக்கு போகவேண்டும் என்று சொன்னால் ஒரு மாதத்திற்கு ரூ.1000 கொடுக்கும் திட்டம் வேறு எந்த மாநிலத்தில் உள்ளது. கல்லூரியில் பெண்கள் எத்தனை ஆண்டுகள் படித்தாலும் மாதம் ஒன்றுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.

அதிமுக பற்றி கருத்து
ஒரு வீட்டில் 4 பெண் பிள்ளைகள் இருந்து அனைவரும் கல்லூரியில் படித்தால் நால்வருக்கும் ரூ.1000 வழங்கப்படுகிறது. அதிமுக குறித்து செய்தியாளர்கள் அடிக்கடி கேட்கிறார்கள். அதிமுகவும் திராவிடர் கழகம் தான். அதனால் தான் எங்களுக்கு கவலை உள்ளது. எம்ஜிஆர் மற்றும் அண்ணாவின் பெயரில் ஆரம்பித்து அண்ணா திமுக என வைத்தார்.

அதிமுக அடமானம்
இப்போது அதிமுகவில் உள்ள அண்ணாவை எடுத்துவிட்டு அடமான திமுக என ஆக்கிவிட்டார்கள். டெல்லியில் போய் அதிமுக என்ற கட்சியை அடமானம் வைத்துவிட்டார்கள். எவ்வளவு சீக்கிரம் மீட்கிறார்களோ அதுதான் அவர்களுக்கும் நல்லது. நமக்கும் நல்லது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications