திண்டுக்கல்லில் இருதரப்பு மோதல்.. பெட்ரோல் குண்டு வீச்சு- 5 பேருக்கு வெட்டு.. படபாணியில் பயங்கரம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மீன் விற்ற பிரச்சனையில் இருதரப்பு மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சினிமாபட பாணியில் நள்ளிரவில் 30க்கும் மேற்பட்ட நபர்களுடன் கிராமத்துக்குள் நுழைந்து பெட்ரோல் குண்டு வீசி, 5 பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய பயங்கர சம்பவம் நடந்துள்ளது. பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளபட்டி பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பக்கத்து ஊரான கந்தப்பக்கோட்டையில் மினி வேனில் சென்று மீன் விற்பனை செய்தனர்.
அப்போது இவர்களுக்கும் அந்த பகுதியை சேர்ந்த 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மீன் விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் 3 பேரும், மற்ற 2 பேரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

மினிவேன் மீது தாக்குதல்
இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இருப்பினும் காவல் துறையினர் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் கந்தப்பகோட்டையில் தாக்கப்பட்ட இரண்டு வாலிபர்களின் தரப்பினர் கோபமடைந்தனர். இதையடுத்து அவர்கள் பள்ளபட்டி அருகே நிறுத்தப்பட்டிருந்த மீன் விற்பனை செய்த மினிவேனின் கண்ணாடியை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது.

நள்ளிரவில் 30 பேர்
இது மீன்விற்ற இளைஞர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் மதுரை,வாடிப்பட்டி,சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 30க்கும் மேற்பட்ட கூலிப்படையினருடன் சேர்ந்து திரைப்பட பாணியில் நள்ளிரவில் ஊருக்குள் புகுந்தனர். பட்டாக்கத்தி, வாள், அரிவாள், உருட்டுகட்டை உள்ளிட்டவற்றுடன் தெருத்தெருவாக சுற்றினர்.

பெட்ரோல் குண்டு வீச்சு- அரிவாள் வெட்டு
3க்கும் மேற்பட்ட வீடுகளை அடித்து நொறுக்கி சாலையில் நிறுத்தியிருந்த கார், ஆட்டோ, இரண்டு இருசக்கர வாகனம் ஆகியவற்றை அடித்து சேதப்படுத்தினர். மேலும் தெருவில் நடந்து சென்ற சுமார் 5-க்கும் மேற்பட்ட இளைஞர்களை துரத்தி துரத்தி அரிவாளால் சராமாரியாக வெட்டியுள்ளனர். அதோடு பெட்ரோல் குண்டு வீசி இரண்டு வீடுகளை சேதப்படுத்தியுள்ளனர். இதுதவிர வீட்டில் இருந்த நபர்களை தாக்க முயற்சித்து கதவுகளை கடுமையாக சேதப்படுத்தியுள்ளனர் கால்நடை கூடாரங்கள் உள்ளிட்டவைகளும் கடுமையாக சேதப்படுத்தி ஆட்டுக்குட்டி ஒன்றையும் வெட்டிவிட்டு சென்றனர்.

ஆபத்து நிலையில் 2 பேர்
இந்த வெறிச்செயலால் வெட்டுப்பட்டு காயமடைந்த ஐந்து பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

பாதுகாப்பு; தனிப்படையினர் தேடுதல்
இதனையடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு திண்டுக்கல் தேனி சரக காவல்துறை துணைத் தலைவர் ரூபேஷ்குமார் மற்றும் எஸ்பி சீனிவாசன் ஆகியோர் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் விசாரணை நடத்தினர். தாக்குதல் நடத்திய கும்பலை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் அச்சம்
நிலக்கோட்டை டிஎஸ்பி தலைமையிலான சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கிராமத்தை பாதுகாப்பு விவகாரத்தில் கொண்டு வந்துள்ளனர். மீன் விற்கும் விவகாரத்தில் சம்பவத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் திரைப்பட பாணியில் ஒருதரப்பினர் பெட்ரோல் குண்டு வீசி, 5 பேரை வெட்டிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களை காவல்துறை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications