இப்போ தான் என்னால முடிஞ்சது! வார்டு மக்களுக்கு ‘அண்டா’ கொடுத்த அதிமுக கவுன்சிலர்! இவ்வளவு லேட்டாவா?
திண்டுக்கல் : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்து கிட்டத்தட்ட ஆறு ஏழு மாதங்கள் ஆகி உள்ள நிலையில் தற்போது திண்டுக்கல் மாநகர 34வது வார்டு அதிமுக கவுன்சிலர் பாஸ்கரன் வாக்காளர்களை வீட்டுக்கு அழைத்து அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதோடு, ஒரு அண்டா கொடுக்க இவ்வளவு நாட்களாக என வாக்காளர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்டவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
அதிமுக இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது என்றே அடித்துக் கூறலாம். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் பெரும்பாலான நகராட்சி பேரூராட்சிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே கைப்பற்றின.
தேர்தல் வரட்டுங்க.. அப்போ பார்த்துக்கலாம்.. பரூக் அப்துல்லா கொடுத்த முக்கிய அப்டேட்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
குறிப்பாக திண்டுக்கல்லில் அதிமுக கடுமையான தோல்வியை எதிர்கொண்டது. திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 48 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 37 இடங்களில் வெற்றி பெற்றன . குறிப்பாக மாநகராட்சியை கைப்பற்ற தேவையான 25 இடங்களுக்கும் 5 இடங்கள் கூடுதலாக அதாவது 30 வார்டுகளில் திமுக தனித்தே வென்றது. திமுக 30 இடங்களிலும், கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும், இந்திய காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது.
அதிமுக படுதோல்வி
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் என தமிழக அளவில் இரு பெரும் தலைவர்கள் இருந்த போதிலும் திண்டுக்கல் மாநகராட்சி கைவிட்டுப் போனது. மேலும் அவரவர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஒரு நகராட்சியைக் கூட கைப்பற்ற முடியவில்லை. திண்டுக்கல் மாநகராட்சியைப் பொறுத்தவரை அதிமுக படுதோல்வியை சந்தித்தது என்று தான் கூற வேண்டும். 48 வார்டுகளில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி 5 இடங்களில் மட்டுமே வென்றது. அதிலும் ஒருவர் திமுகவில் இணைந்து விட்டார்.
வாக்காளர்களுக்கு அண்டா
முன்னாள் அமைச்சர் சீனிவாசனின் மகன் ராஜ்மோகன், பகுதி கழக செயலாளர்கள் பாரதிமுருகனின் மனைவி உமாதேவி , மோகனின் மனைவி சத்தியவாணி, பாஸ்கரன், மேட்டுப்பட்டி அமலேற்பவ மேரி ஆகியோர் மட்டும் வெற்றி பெற்றனர். இதனால் அதிமுகவினர் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாயினர். இந்நிலையில் தான் அதிமுகவில் 34வது வார்டில் வெற்றி பெற்ற கவுன்சிலரான பாஸ்கரன் வாக்காளர்களுக்கு பரிசுகளை வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.
பகீர் புகார்
தேர்தலுக்குப் பிறகு பொதுவாக இனிப்புகள் தான் வழங்கப்படும் என்பது வழக்கம். ஆனால் அப்போது தனது சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் வாக்காளர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை இப்போது ஓரளவு பரவாயில்லை எனவே இந்த நினைவுப் பரிசை பெற்றுக் கொள்ளுங்கள் என அண்டாவுக்குள் வைத்து பாஸ்கரன் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகார் ஒருபுறம் எழுந்திருந்தாலும் தேர்தல் முடிந்து இத்தனை நாட்கள் கழித்தா பரிசு வழங்குவது என வாக்காளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்? அதே நேரத்தில் என்ன இருந்தாலும் ஜெயித்து விட்டோம் என்ற கர்வம் இல்லாமல் இதையாவது செய்கிறாரே என்ற அதிமுகவினர் கூறி வருகின்றனர். மேலும் வாக்காளர்களுக்கு பரிசு கொடுத்த புகைப்படங்களையும் பாஸ்கரன் பெருமையாக வாட்ஸ் ஆப்பில் பரப்பி விட்டு உள்ளார்.