எடுத்த உறுதிமொழியை மறந்துட்டாரு.. ’தேர்தலுக்கு முன்பே ஆட்சி மாற்றம்’ - திண்டுக்கல் சீனிவாசன் பரபர!
திண்டுக்கல் : முதலமைச்சராக பதவி ஏற்கும்போது அனைத்து மக்களையும் சமமாக பார்ப்பேன் என்று எடுத்த உறுதிமொழியை மு.க.ஸ்டாலின் மறந்துவிட்டார் என அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான பணிகள் நடப்பதாக கூறுகின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர் என்றும் பொடி வைத்துப் பேசியுள்ளார் திண்டுக்கல் சீனிவாசன்.
மேலும் பேசிய அவர், தி.மு.க ஆட்சியின் அவலங்களை மறைக்க மு.க.ஸ்டாலின் ஆ.ராசாவை பேச வைத்து நாடகம் போடுகிறார் என்றும் விமர்சித்துள்ளார் திண்டுக்கல் சீனிவாசன்.
பாட புத்தகத்தில் 'வர்ணம்’.. கோவணம் தான் மிச்சம்.. கொஞ்சம் என்னனு கேளுங்க 'மலை’.. சீண்டிய ராஜீவ்!
ஒன்றரை ஆண்டுகளில்
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், திண்டுக்கல் மணிக்கூண்டில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றுப் பேசினார். அவர் பேசுகையில், தி.மு.க ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஆட்சிக்கு வந்த உடனே சொத்து வரியை பல மடங்கு உயர்த்தினர். தற்போது மின் கட்டணத்தையும் கடுமையாக உயர்த்தி விட்டனர்.
ஆ.ராசாவை பேச வைத்து
கொலை, கொள்ளை, கற்பழிப்பு என குற்றங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. இதனால் தி.மு.க ஆட்சியின் அவலங்களை மறைக்க மு.க.ஸ்டாலின் நாடகம் போடுகிறார். ஒன்றரை ஆண்டுகள் தி.மு.க செய்த தவறுகளை மறைப்பதற்காக ஆ.ராசாவை பேச வைத்துள்ளார். இந்துக்களை மிகவும் கேவலமாக ஆ.ராசா பேசி இருக்கிறார். அதோடு தன் மீது வழக்கு போடுங்கள் என்று மீண்டும் பேசுகிறார்.
உறுதிமொழியை மறந்துவிட்டார்
முதலமைச்சராக பதவி ஏற்கும்போது அனைத்து மக்களையும் சமமாக பார்ப்பேன் என்று எடுத்த உறுதிமொழியை மு.க.ஸ்டாலின் மறந்து விட்டார். அதனால் தான் இந்துக்கள் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆ.ராசாவின் பேச்சு மத மோதல்களை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. அதை மக்கள் கேள்வி கேட்க வேண்டும்.
கருணாநிதிக்கு 250 கோடி?
அதிமுக கொண்டு வந்த நல்ல திட்டங்களை நிதி இல்லை என்று கூறி தி.மு.க அரசு நிறுத்திவிட்டது. அதேநேரம் மக்கள் வரிப்பணத்தில் கருணாநிதி பெயரில் ரூ.37 கோடிக்கு நினைவு மண்டபம், ரூ.87 கோடிக்கு கடலில் பேனா, ரூ.12 கோடியில் அருங்காட்சியகம், ரூ.114 கோடியில் நூலகம் கட்டப்படுகிறது. தி.மு.க கட்சிப் பணத்தில் அதை செய்யலாமே? மக்கள் வரி பணத்தை மக்களுக்கு செலவு செய்யாமல் வீணடிக்கலாமா?
திமுகவை எதிர்த்து
திமுக அரசு அ.தி.மு.க திட்டங்களுக்கு தனது பெயரில் ஸ்டிக்கர் ஒட்டுகிறது. இத்தகைய திமுகவை அழிக்க வேண்டும் என்று தான் அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கினார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் திமுகவோடு சேர்ந்து குழப்பம் ஏற்படுத்த முயன்றார். இதனால் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும். அதில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார்.
ஆட்சி மாற்றம் வரப்போகுது
மராட்டியத்தில் சிவசேனாவின் ஆட்சி பிடிக்காமல் எம்.எல்.ஏக்கள் பிரிந்து சென்றதால் ஷிண்டே முதலமைச்சராகி இருக்கிறார். அதேபோல் தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்துக்கான பணிகள் நடப்பதாக கூறுகின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். அந்த நிலை வந்தால் வரவேற்போம். அதோடு நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.கவை வெற்றிபெற வைப்போம்.