போட்டோ எடுக்குறாங்க.. ஓபிஎஸ் பின்னால் பதுங்கிய ‘ஒன்றியம்’! தலைமைக்கு பறந்த புகார்! பதவி காலியா?
திண்டுக்கல் : அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதியும் இரட்டை இலை சின்னத்தை தேர்ந்தெடுத்து அதில் வெற்றி பெற்றவருமான மாயத்தேவர் காலமான நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த ஓ.பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி ஆதரவு ஒன்றிய செயலாளர் ஒருவர் வந்தது அதிமுகவினரையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர் 1972 ஆம் ஆண்டில் அதிமுக தொடங்கிய நிலையில் 1973 ஆம் ஆண்டு திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
கட்சி தொடங்கிய மிகக் குறுகிய காலத்தில் நடைபெற்ற இந்த தேர்தலில் அதிமுக சார்பில் வழக்கறிஞரான மாயத்தேவர் என்பவர் போட்டியிட்டார். அவருக்கு மூன்று சின்னங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் இரட்டை இலையை தேர்ந்தெடுத்தவர் மாயத்தேவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் மாயத்தேவர்
அந்த தேர்தலில் மாயத்தேவர் பெரு வெற்றி பெற்ற நிலையில் திமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதன் மூலம் அதிமுக தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற முதல் எம்பி என்பதோடு அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதி மாயத்தேவர் என்பது குறிப்பிடத்தக்கது. உடல் நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் சின்னாளபட்டியில் மனைவியுடன் வசித்து வந்தார். தற்போது அதிமுகவில் அதிகார மோதல்கள் வெடித்து கிளம்பியுள்ள நிலையில் யாருக்கும் ஆதரவின்றி வீட்டிலேயே இருந்த அவர் நீண்ட காலமாக கட்சி நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொண்டது கிடையாது.

மாயத்தேவர் மரணம்
இந்நிலையில் நேற்று திடீர் உடல்நல குறைவு காரணமாக மாயத்தேவர் மரணம் அடைந்தார். இதை அடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக அவர் உடல் சின்னாளபட்டியில் உள்ள அவர் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று உள்ளூர் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் நத்தம் விஸ்வநாதன் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

சர்ச்சை
முன்னதாக சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த சசிகலா பின்னர் சின்னாளபட்டி வந்து மாயத்தை அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே ஓ பன்னீர்செல்வம் முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் மாயத்தேவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதில் தான் ஒரு சர்ச்சை பிடித்திருக்கிறது.

ஒன்றிய செயலாளர்
அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத்தின் நெருங்கிய நண்பரான பசும்பொன் என்பவர் ரெட்டியார்சத்திரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளராக இருக்கிறார். ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளராக இருந்த அவர் அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருந்ததோடு பொதுக்குழுவிலும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் பசும்பொன் பெயர் அதில் இடம்பெறவில்லை காரணம் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக அவர் இருப்பதாக கருதப்பட்டதால் திண்டுக்கல் அதிமுக மாவட்ட செயலாளரான சீனிவாசன் அவர் பெயரை பரிந்துரைக்கவில்லை.

பதவி நீக்கம்?
இந்நிலையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் திண்டுக்கல் வந்த நிலையில் அவரை பிரம்மாண்டமாக வரவேற்றார் பசும்பொன். அதோட ஓபிஎஸ்ஐ துக்க வீட்டிலும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றது அவர்தான். இதனிடையே செய்தியாளர்களை சந்திப்பது புகைப்படம் எடுப்பதை பார்த்த அவர் கூட்டத்தில் பின்னால் சென்று லேசாக மறைந்து கொண்டார். வத்தலகுண்டு ஒன்றிய செயலாளர் மோகனும், முக்கிய நிர்வாகியான வைகை பாலன், முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன் ஆகியோரும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதற்குப் பிறகு அதிமுக எடப்பாடி ஆதரவு நிர்வாகிகள் மாயத்தேவருக்கு அஞ்சலி செலுத்திய நிலையில் பசும்பொன் வருகை குறித்த தகவல் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இடத்தில் தலைமைக்கு புகார் பறந்துள்ளதாகவும் விரைவில் பசும்பொன் வகித்து வரும் ஒன்றிய செயலாளர் பதவி பறிக்கப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications