அரசியல் பிரமுகருக்கு நெருக்கமான தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயற்சி-போலி வருமானவரித்துறை அதிகாரி கைது!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழகத்தின் முக்கியமான அரசியல் பிரமுகருக்கு மிகவும் நெருக்கமான தொழிலதிபரிடம் வருமான வரித்துறை சோதனை நடத்துவோம் என மிரட்டி பணம் பறிக்க முயன்ற போலி ஆசாமி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட நிதி நிறுவன அதிபர்கள், செங்கல் சூளை அதிபர்களை குறிவைத்து வருமான வரித்துறை அதிகாரி என போலி ஆவணங்களை காட்டி பணம் பறித்த சீர்காழியை சேர்ந்த 75 வயது முதியவர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சத்திரப்பட்டி பகுதியில் செங்கல் சூளைகள் அதிகமாக செயல்பட்டு வருகின்றன. இந்த செங்கல் சூளைகளில் ஒன்றின் உரிமையாளர் செந்தில்குமார். இவர் சிட் பண்ட் நிறுவனமும் நடத்துகிறார்.

தமிழ்நாட்டின் மிக முக்கியமான அரசியல் பிரமுகருக்கு நெருக்கமான செந்தில்குமாரின் சிட் பண்ட் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் சில மாதங்களுக்கு முன்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். இந்த நிலையில் தொழிலதிபர் செந்தில்குமாரை 75 வயது முதியவர் ஒருவர் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, தாம் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி என்றும் உங்களது நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடக்கப் போகிறது; அதை தடுக்க வேண்டுமானாலும் பணம் தர வேண்டும் என பேரம் பேசியிருக்கிறார். அந்த நபரின் பேச்சில் சந்தேகம் அடைந்த செந்தில்குமார் தரப்பு, அனைத்து மேலிடங்களிலும் நன்றாக விசாரணை செய்திருக்கிறது. அப்போது வருமான வரித்துறை அலுவலகத்தில் அப்படி ஒருநபரே இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர், சத்திரப்பட்டி போலீசுக்கும் தகவல் தந்துள்ளது.

இதனையடுத்து செந்தில்குமாரின் அலுவலகத்துக்கு வந்த சத்திரப்பட்டி போலீசார், பணம் பறிக்க காத்திருந்த 75 வயது முதியவரான சீர்காழி சந்திரசேகரனை தட்டி தூக்கி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தது. இந்த விசாரணையில், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படும் நிறுவனங்களை மட்டுமே குறிவைத்து தாம் மிரட்டி பணம் பறித்ததாக சந்திரசேகரன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்திரசேகரன் கைது செய்யப்பட்டார். தற்போது சந்திரசேகரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சந்திரசேகரனுக்கு பின்னணியில் உண்மையான அதிகாரிகள் யாரும் இருக்கின்றனரா? என்பது குறித்தும் சத்திரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏனெனில் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி சிக்கிய விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சத்திரப்பட்டியில் சிக்கிய சந்திரசேகரனின் பின்னணி குறித்தும் தீவிரமாக விசாரிப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications