கொடைக்கானல் அருகே குழந்தை பிறந்த 25 நாளில் பெண்ணுக்கு நடந்த அநீதி.. டாக்டரை விசாரித்தால் ட்விஸ்ட்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கிளீனிக்கில் சிகிச்சை பெற்ற கவுஞ்சி கிராமத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முறையாக சிகிச்சை அளிக்காததால், பிரியதர்ஷினி இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டிய நிலையில், விசாரித்து பார்த்தால் சிகிச்சை அளித்தவர் போலி டாக்டர் என்பது தெரியவந்துள்ளது. அவரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் ஊராட்சிக்கு கவுஞ்சியை சேர்ந்த விவசாயி சர்வேந்தன் (வயது 26). இவருடைய மனைவி பிரியதர்ஷினி (24). இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்தநிலையில் மீண்டும் கர்ப்பமான பிரியதர்ஷினி, பிரசவத்துக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 25 நாட்களுக்கு முன்பு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே பிரியதர்ஷினி சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பினார். வீட்டில் இருந்த பிரியதர்ஷினிக்கு நேற்று முன்தினம் திடீரென வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது.

இதைத்தொடர்ந்து பிரியதர்ஷினி கவுஞ்சியில் உள்ள கிளினிக்கில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு ஊசி மூலம் மருந்து செலுத்திய சில நிமிடங்களில் பிரியதர்ஷினி மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினியின் உறவினர்கள், அவருக்கு செலுத்திய மருந்து பாட்டிலை எடுத்து கொண்டு மன்னவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு பிரியதர்ஷினியை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே முறையாக சிகிச்சை அளிக்காததால், பிரியதர்ஷினி இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பூமிநாதன், நலப்பணி துணை இயக்குனர் டாக்டர் அனிதா, மருந்தக ஆய்வாளர் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. அதாவது போலி டாக்டர் சிகிச்சை அளித்ததால் பிரியதர்ஷினி உயிரிழந்தது தெரியவந்தது.
கொடைக்கானல் மேல்மலை கிராமமான கவுஞ்சியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருபவர் பிரின்ஸ். மருந்தாளுனர் படிப்பு முடித்த இவர். அப்பகுதியில் மருத்துவ வசதி இல்லாததால் வீடு, வீடாக சென்று மருத்துவம் பார்த்து வந்தாராம். பின்னர் கம்ப்யூட்டர் சென்டர் அருகே கிளினிக் ஒன்றையும் நடத்தி வந்தாராம். மேலும் அங்கு சிகிச்சைக்கு வந்த பிரியதர்ஷினிக்கு ஆண்டிபயாடிக் செலுத்தியபோது மயங்கி விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மருத்துவ அதிகாரிகள் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து, தலைமறைவாக உள்ள போலி டாக்டர் பிரின்சை தீவிரமாக தேடி வருகின்றனர். மலைக்கிராமங்களில் இதுபோன்று மருத்துவம் படிக்காத நபர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். குழந்தை பிறந்த 25 நாட்களில் தாய் இறந்த சம்பவம் கொடைக்கானல் மன்னவனூர் கவுஞ்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications