"கல்வெட்டு இங்க இருக்கு.. புதுப்பிச்ச பஸ் ஸ்டாப் எங்க?” - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியில் பேருந்து நிறுத்தத்தை புதுப்பிக்காமலேயே புதுப்பித்ததாக கல்வெட்டு வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பரிந்துரையின்பேரில் நடைபெறும் இப்பணி மேற்கொள்ளப்படாமலேயே கல்வெட்டு மட்டும் வைக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு மட்டும் வைத்துவிட்டு தி.மு.க அரசு பணத்தைச் சுருட்டிவிட்டதாக அப்பகுதி அ.தி.மு.கவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

2 அமைச்சர்கள்
திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 2 பேர் தற்போது அமைச்சர்களாக உள்ளனர். ஆத்தூர் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ ஆகி கூட்டுறவுத்துறை அமைச்சராக உள்ளார் தி.மு.க துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி.
ஒட்டன்சத்திரம் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏவாகி தற்போது உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சராக உள்ளார் அர.சக்கரபாணி. இவர் ஒட்டன்சத்திரம் தொகுதியிலிருந்து தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனவர்.

அர.சக்கரபாணி
தொடர்ந்து ஆறு முறை ஒட்டன்சத்திரம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று அந்தத் தொகுதியின் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறார் அர.சக்கரபாணி. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குப் பிறகு தொடர்ச்சியாக அதிக முறை வென்றவர் எனும் பெருமையையும் பெற்றவர் அர.சக்கரபாணி.
தொடர்ந்து பதினைந்து ஆண்டுகளாக சட்டமன்ற கொறடாவாகவும் இருந்துள்ளார். இந்த தி.மு.க ஆட்சியில் சீனியாரிட்டி அடிப்படையில் இவருக்கும் அமைச்சர் பதவி கிடைத்தது.

பொங்கல் தொகுப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பில் தரமற்ற பொருட்கள் இடம்பெற்றதாக பலரும் குற்றம்சாட்டினர். பரிசுத்தொகுப்பில் வழங்கப்பட்ட வெல்லம் உருகி ஓடியதாக பெண்கள் பலரும் புகார் தெரிவித்ததால் இவரது பெயருக்கு கொஞ்சம் டேமேஜ் ஏற்பட்டது. பொங்கல் தொகுப்பு குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களால் முதல்வரே சக்கரபாணி மீது அதிருப்தி அடைந்தார்.

கல்வெட்டு மட்டும்
அமைச்சர் சக்கரபாணி தற்போது இன்னொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு அருகே உள்ளது சிறுநாயக்கன்பட்டி. இந்த கிராமத்தில் பேருந்து நிலையம் ஒன்று பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனை புதுப்பிக்க வேண்டும் என அந்த ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், அந்த பேருந்து நிறுத்தம் அமைச்சர் சக்கரபாணியின் பரிந்துரையின் பேரில் புதிக்கப்பட்டதாக கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இருப்பதோ அதே பழைய பராமரிக்கப்படாத பேருந்து நிறுத்தம்தான்.

புதுப்பிக்கவே இல்லை
பேருந்து நிறுத்தத்தை புதுப்பிக்காமலேயே கல்வெட்டு மட்டும் வைத்துவிட்டு பணத்தைச் சுருட்டிவிட்டதாக அப்பகுதி அதிமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், அமைச்சர் தரப்போ, கல்வெட்டு வைத்த பின்னர், புதுப்பிக்கும் பணி தொடங்கத் திட்டமிடப்பட்டது. உடனடியாக தொடங்கி விரைவாகவே முடிந்துவிடும். அதற்குள் எதிர்க்கட்சியினர் தவறான தகவலைப் பரப்புகின்றனர் எனத் தெரிவிக்கின்றனர். என்ன நடக்கிறது எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்!












Click it and Unblock the Notifications