பட்டைய கிளப்பும் பழனி பஞ்சாமிர்தம்.. கோடி கோடியாய் கொட்டும் வருமானம்! எவ்வளவு விற்பனை தெரியுமா?
திண்டுக்கல்: கடந்த ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை 11 கோடிக்கு பஞ்சாமிர்தம் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 15 கோடிக்கும் அதிகமாக பஞ்சாமிர்தம் விற்பனையாகி உள்ளதாகவும், இது கடந்த ஆண்டு விட சுமார் 4 கோடி ரூபாய் அதிகம் என பழனி முருகன் கோவில் தேவஸ்தானம் கூறியுள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களிலிருந்தும் ,வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.

இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவிலின் அடிவாரம் முதல் பல பகுதிகளில் சுவாமி பிரசாதமான பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படுகிறது.
முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்த பல நோய்களை தீர்க்கும் வல்லமை கொண்டது என பக்தர்கள் நம்புகின்றனர். பல இடங்களில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டாலும் பழனி பஞ்சாமிர்தம் தனி ருசி கொண்டது. நாட்டு சர்க்கரை, மலை வாழைப்பழம், பசு நெய், தேன், ஏலக்காய் ஆகிய ஐந்து இயற்கையான பொருட்களைக் கொண்டு இந்த பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. மேலும் கற்கண்டு பேரிச்சை, உலர் திராட்சை ஆகியவை கூடுதல் சுவைக்காக சேர்க்கப்படுகிறது.
இந்த பஞ்சாமிர்தத்தில் ஒரு சொட்டு நீர் கூட கலக்காமல் சுத்தமான நெய் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது முழுக்க முழுக்க இயந்திரங்கள் மூலமே பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் கடந்தாண்டை விட இந்த ஆண்டு ஐயப்ப சீசன் காலத்தில் பஞ்சாமிர்த விற்பனை 15 கோடி ரூபாயை தாண்டி உள்ளதாக பழனி முருகன் கோவில் தேவஸ்தானம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக பழனி கோவில் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,"உலகப் புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு ஒவ்வொரு வருடமும் கார்த்திகை, மார்கழி, தை ஆகிய ஐயப்ப சீசன் காலங்களில் பல இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகைபுரிந்து பழநியாண்டவரை தரிசனம் செய்துவிட்டு திருக்கோயில் பிரசாதமாக விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தத்தினை வாங்கிச் சென்றுவருகின்றனர்.
வழக்கம்போல் இந்த வருடமும் நடப்பு கார்த்திகை மாதத்தில் தினந்தோறும் இலட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்களும் மற்றும் இதர பக்தர்களும் பழநியாண்டவரை தரிசனம் செய்ய வந்துகொண்டிருக்கின்றனர். அனைத்து பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் திருக்கோயிலிலிருந்து பஞ்சாமிர்தம் தயார் செய்யப்பட்டு பிரசாதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பக்தர்களின் வசதிக்காக மலைக்கோயிலில் மட்டும் 4 பஞ்சாமிர்த விற்பனை நிலையங்களும், அடிவாரப் பகுதியில் 1) மங்கம்மா மண்டபம்-1, 2) மங்கம்மா மண்டபம்-II, 3) அடிவார தகவல் மையம், 4) பூங்கா ரோடு, 5) சுற்றுலா பேருந்து நிலையம், 6) ரோப்கார் 7) வின்ச் நிலையம் 8) நகராட்சி பேருந்து நிலையம் 9) திருஆவினன்குடி திருக்கோயில் வளாகம் ஆகிய 9 இடங்களிலும், ஆக மொத்தம் 13 பஞ்சாமிர்த விற்பனை நிலையங்கள் நடத்தப்பட்டு பற்றாக்குறை ஏதும் இல்லாதவாறு பக்தர்களின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுவருகிறது.
கடந்த பசலி (1433) வருடத்தில் 01.07.2023 முதல் 30.11.2023ம் தேதி முடிய மொத்தம் ரூ.11,49,87,540/-க்கு பஞ்சாமிர்தம் விற்பனையாகிய நிலையில் நடப்பு பசலி (1434) வருடத்தில் 01.07.2024 முதல் 30.11.2024ம் தேதி முடிய மொத்தம் ரூ.15,86,19,125/-க்கு பஞ்சாமிர்தம் விற்பனையாகி உள்ளது." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications