நீ பொட்டு வச்ச தங்க குடம்.. மேடையில் கேட்ட கேப்டனின் குரல்! விம்மி அழுத பிரேமலதா.. நெகிழ்ந்த மக்கள்!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பொது கூட்ட மேடையில் ஒலிக்கப்பட்ட விஜயகாந்த் குரல் ஆடியோவை கேட்டு கண் கலங்கினார் தேமுதிக பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்த். விஜயகாந்த் புகைப்படத்தை மேடையில் காண்பித்த போது பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் தங்களுடைய செல்போனில் டார்ச் அடித்து அஞ்சலி செலுத்தினர்.
திண்டுக்கல், நாகல்நகர் பகுதியில் தேமுதிக கொடிநாள் வெள்ளி விழா, உலக மகளிர் தின விழா, பொது செயலாளர் பிறந்தநாள் விழா என முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக் கூட்டத்தில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது விஜயகாந்த் பேசும் ஆடியோ ஒலிபரப்பப்பட்டதை கேட்டு கண் கலங்கினார் பிரேமலதா விஜயகாந்த். முன்னதாக நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சி முடிவில் விஜயகாந்த் புகைப்படத்தை மேடையில் காண்பிக்கப்பட்ட போது பொதுமக்கள் ஏராளமான தங்களுடைய செல்போனில் டார்ச் அடித்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து பேசிய பிரேமலதா," தமிழ் மொழியில் மட்டுமே நடிப்பேன் என வாழ்ந்து காட்டியவர் விஜய்காந்த். மற்ற நடிகர்கள் தமிழ் மொழி மட்டும் இல்லை மற்ற மொழிகளிலும் நடிக்கின்றனர். கோக்க கோலா, நகை விளம்பரத்தில் அவர் நடித்தது இல்லை. அவருக்கு பல விளம்பரம் வந்தது என்பது எனக்கு தெரியும். பல முறை திண்டுக்கல் வந்துள்ளேன். திண்டுக்கல் என்றாலே அது கேப்டனின் கோட்டை. திண்டுக்கல்லுக்கு விஜயகாந்த் உடன் எப்போது வந்தாலும் மக்கள் வெள்ளத்தில் தான் சென்றுள்ளோம்.

தேர்தல் நேரத்திலும், பிரச்சாரத்திலும் கூட்டத்திற்கு சென்றாலும் மக்கள் கூட்டமாக திரண்டு வருவார்கள். விஜயகாந்த் எங்கும் செல்லவில்லை நம்முடன் தான் இருக்கிறார். விஜயகாந்த் மறைந்த போது கருடன் வட்டமிட்டது. அதே போல விஜயகாந்த் நினைவகத்தில் தினமும் கருடன் வட்டமிடுகிறது. திண்டுக்கல் என்றாலே பூட்டு மற்றும் பிரியாணி தான். இரண்டும் உலகம் முழுவதும் சென்று அடைந்துள்ளது.
நமது கொடி கலரில் உள்ள சிவப்பு சாதி மதம் இல்லாமல் நமது இரத்தத்தின் கலரை குறிக்கிறது. மஞ்சள் ஏழைகள் இல்லாத நிலை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கிறது. கருப்பு லஞ்சம், ஊழல், பெண் எதிரான குற்றத்தை தடுத்து நமது முடியின் நிறத்தை விஜய்காந்த் கொடுத்தார்.

விஜயகாந்த் ஒரு வயதில் தாயை இழந்தவர். அவருக்கு நான் தாயாக இருந்தேன். அவரை பேபி என அழைப்பேன். அவருக்கு அனைத்தும் நானே, எனக்கு எல்லாம் அவரே. அவருக்கு நான் தான் சாப்பாடு ஊட்டி விடுவேன். நடித்து முடித்து எத்தனை மணிக்கு வந்தாலும் இரவு முழுவதும் இருந்து சூடாக உணவு கொடுத்து தான் உறங்க செல்வேன். நாம் ஆளும் கட்சி இல்லை. ஆண்ட கட்சியும் இல்லை. நோட்டை எடுத்து கொண்டு மிரட்டி பணம் வாங்கும் கட்சியா? இருந்தும் இன்று திண்டுக்கல் முழுவதும் நமது கொடியாக உள்ளது.
விஜயகாந்த் பெண்களுக்காக பல உதவிகளை செய்தவர். மக்கள் விஜயகாந்தை தவற விட்டுவிட்டனர். அவர் பணம் புகழ் எல்லாம் இருந்தும் மக்களுக்காக வாழ நினைத்தார். விஜயகாந்த் வெள்ளந்தியாக இருந்தார். அவரை நாம் தவற விட்டுவிட்டோம். நமக்கு நேரம் வரும் போது சொல்கிறேன். திண்டுக்கல் மாநகராட்சியில் மா இல்லை நகராட்சி மட்டும் தான் இருக்கிறது. சிறுமலையில் நடந்த வெடி குண்டு சம்பவத்தை மூடி மறைக்கிறது போலீஸ். அங்கு இந்த வெடி முழுமையாக வெடித்தால் சிறுமலை இருந்து இருக்காது" என்றார்.












Click it and Unblock the Notifications