பட்டமளிப்பு விழாவில் பிரதமர்! கூடவே வரும் முதல்வர்! பாஜகவா? திமுகவா? கெத்து காட்ட தயாராகும் கட்சிகள்
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் தமிழக முதல்வர் ஸ்டாலினும் ஒரே மேடையில் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் பிரம்மாண்டமாக வரவேற்க பாஜக, திமுகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இரு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும் திண்டுக்கல்லில் முகாமிட்டுள்ளதால் ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. மதுரை சாலையில் சின்னாளபட்டி பகுதியில் காந்தி கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. திண்டுக்கல்லின் பழமை வாய்ந்த பல்கலைக்கழகமான இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்களின் கல்வி கனவை நிறைவேற்றிய இந்த கல்லூரியில் 11ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.

பிரதமர் மோடி
இதற்காக பெங்களூருவில் இருந்து மதுரை வரும் பிரதமர் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, மதுரையில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வர இருக்கிறார். இதையொட்டி காந்திகிராம பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பே ஹெலிபேட் அமைக்கப்பட்டது. பிரதமர் வருகைக்கு இன்னும் இரு நாட்களே இருக்கும் நிலையில் தற்போதைய அந்த ஹெலிபேடில் ஹெலிகாப்டரை இறங்க வைத்து சோதனை நடைபெற்றது.

முதல்வர் ஸ்டாலின்
மேலும் டிஜிபி அறிவுறுத்தலின் பேரில் ஐஜி, டிஐஜி, திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்ட எஸ்பிக்கள் உள்ளிட்ட நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர். தற்போதே அவர்கள் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலினும் இந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். ஈரோடு கரூர் மாவட்டங்களில் தனியார் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதல்வர் 11ஆம் தேதி சாலை மார்க்கமாக திண்டுக்கல் வந்து பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.

திமுக பிரம்மாண்டம்
இதையடுத்து கரூர் எல்லையில் இருந்து திண்டுக்கல் காந்திகிராமம் வரை சுமார் 50 கிலோமீட்டர் நீளத்திற்கு முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்ட அமைச்சர்களான பெரியசாமி, சக்கரபாணி ஏற்பாட்டில் இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதி எம்எல்ஏவும் திமுக மாவட்ட செயலாளருமான செந்தில்குமார் பல்கலைக்கழகத்தில் முதல்வருக்கு வரவேற்பு வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார். அருகிலுள்ள மாவட்ட செயலாளர்களும் அமைச்சர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்பதால் முதல்வருக்கு இதுவரை இல்லாத அளவு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

போட்டியிடும் பாஜக
இதே போல மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவும் தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவுக்கு போட்டியாக களத்தில் இறங்கியுள்ளது. மதுரையில் இருந்து பிரதமர் செல்லும் வழியில் எல்லாம் பிளக்ஸ் பேனர்கள் கொடிகள் என மாஸ் காட்ட திட்டமிட்டு இருக்கின்றனர். ஏற்கனவே பாஜக பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் தலைமையில் பல்வேறு மாவட்ட செயலாளர்கள் அடங்கிய குழு பிரதமரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பிரதமர் வருகை குறித்து நடைபெற்று வரும் ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார். இப்படி பாஜக, திமுக நிர்வாகிகள் திண்டுக்கல்லை குறிவைத்து பணியாற்றி வருவதால் தொண்டர்களுக்குள்ளேயே போட்டி உருவாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications