திண்டுக்கல்லில் வெளுக்கும் கனமழை! ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல்! பிரதமர் பயணத்தில் மாற்றம்?
திண்டுக்கல் : பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக காந்திகிராமத்திற்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி வருகை தர இருக்கும் நிலையில், காலையிலிருந்தே திண்டுக்கல்லில் மழை பெய்து வருவதால், மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக திண்டுக்கல்லுக்கு பிரதமர் நரேந்திர மோடி காரில் வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video

திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச் சாலையில் சின்னாளபட்டி பகுதியில் காந்தி கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பல்கலைக் கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக பெங்களூருவில் இருந்து மதுரை வரும் பிரதமர் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, மதுரையில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வர இருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி
இதையொட்டி காந்திகிராம பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பே ஹெலிபேட் அமைக்கப்பட்டது. பிரதமர் வருகைக்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் தற்போதைய ஹெலிபேடில் ஹெலிகாப்டரை இறங்க வைத்து மீண்டும் சோதனை நடைபெற்றது. பிரதமர் வருகையொட்டி தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் ஐஜி, டிஐஜி, திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்ட எஸ்பிக்கள் உள்ளிட்ட நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்
தற்போது போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலினும் இந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். ஈரோடு கரூர் மாவட்டங்களில் தனியார் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதல்வர் இன்று சாலை மார்க்கமாக திண்டுக்கல் வந்து பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.

பயண திட்டத்தில் மாற்றம்
இந்நிலையில் திண்டுக்கல்லில் மழை பெய்து வருவதால் மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக திண்டுக்கல்லுக்கு பிரதமர் நரேந்திர மோடி காரில் வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக திண்டுக்கல் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலையிலிருந்து மழை பெய்து வருகிறது இதன் காரணமாக ஹெலிகாப்டர் அம்பாத்துறையில் தரை இறங்குவதில் சிக்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்டத்தில் மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

வாகன ஒத்திகை
ஏற்கனவே முன்னெச்சரிக்கையாக நேற்று ஒரு மணி முதல் மாலை 5 மணி வரையும், இன்று காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை மதுரை மார்க்கத்தில் இருந்து திண்டுக்கல் மற்றும் திண்டுக்கல் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் அலங்காநல்லூர் நத்தம் வழியாக செல்லும் எனவும் இந்த நேரங்களில் மதுரை திண்டுக்கல் 4 வழி சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் பிரதமர் பாதுகாப்பு வாகனங்களும் இரு முறை 58 தூர வழியில் ஒத்திகை பார்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பிரதமரின் பயணம் இறுதி மாறுதலுக்குட்பட்டது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications