பழனியை பதற வைத்த துப்பாக்கி சூடு! ப்ளான் பண்ணி பண்ணலை..விபத்து தான்! திண்டுக்கல் எஸ்பியின் விளக்கம்!
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது திட்டமிட்ட சம்பவம் இல்லை எனவும், கவனக்குறைவால் நடந்த விபத்து என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் விளக்கம் அளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் கார்த்தி என்பவர் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற பெத்தநாயக்கன்பட்டி தோட்டத்தில் விசாரணை நடத்தினர்.
அப்போது தோட்டத்து சாலையில் இருந்து 16 ஏர்கன் துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இதில் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்த கும்பகோணத்தை சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் ஓபிஎஸ் வெர்ஷன்! ’வெள்ளி’யைக் கொடுத்த கில்லி! உண்மையில் உயர்ந்ததா ஓபிஎஸ் செல்வாக்கு?
பழனி துப்பாக்கிச் சூடு
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருவதாகவும், கள்ளத்துப்பாக்கி புழக்கம் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினார். திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 3 ஆண்டுகளில் 3 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.
எஸ்பி பாஸ்கரன்
இந்நிலையில் இது திட்டமிட்ட சம்பவம் இல்லை எனவும், கவனக்குறைவால் நடந்த விபத்து என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்," பெத்தநாயக்கன்பட்டி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிர்பாராத விபத்து என்றும், துப்பாக்கி குண்டு பாய்ந்த கார்த்தி மற்றும் மோகன்ராஜ் இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்றும், மோகன்ராஜ்க்கு சொந்தமான ஏர்கன் எனப்படும் துப்பாக்கியை பயன்படுத்திய பொழுது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்து கார்த்தியின் நெஞ்சுப்பகுதியில் குண்டு பாய்ந்தது.
கவனக்குறைவால் விபத்து
இந்த உண்மையை வெளியே சொல்லாமல் மறைத்து, யாரோ சுட்டதாக பொய்யான தகவலை போலீசாரிடம் தெரிவித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி லைசென்ஸ் தேவையில்லாத துப்பாக்கி என்றும், சாதாரண விளையாட்டு துப்பாக்கியை வேட்டையாடுவதற்காக சிறு சிறு மாற்றங்கள் செய்துள்ளனர். இதை அடுத்து மோகன்ராஜ் மற்றும் அவரது நண்பர் பழனியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளோம்.
முழுமையான விசாரணை
காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கார்த்தி மீது இரு கொலை வழக்குகள் பதியப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளதும் தெரியவந்துள்ளது. தற்பொழுது துப்பாக்கியை கவனக்குறைவாக பயன்படுத்தி ஒருவரை காயம் செய்ததாக வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளதாகவும்,மேலும் இவ்வழக்கில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்று முழுமையாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.