தமிழகம் காத்திருக்கு.. கண் இமைக்கும் நொடியில் மாற்றம் தலைவா.. ரஜினியை அரசியலுக்கு அழைத்த ரசிகர்கள்
திண்டுக்கல்: சமீபத்தில் ஆளுநர் ஆர்என் ரவியை ரஜினிகாந்த் சந்தித்து பேசிய நிலையில் தற்போது மீண்டும் ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைக்கும் வகையில் திண்டுக்கல் நகரில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் ‛‛கண் இமைக்கும் நொடியில் மாற்றம் இருக்கு. தமிழகம் இன்னும் காத்திருக்கு தலைவா'' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளார். இவர் அரசியலில் நுழைவார் என்று காலம்காலமாக கூறப்பட்டு வந்தது.
குறிப்பாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என கூறி வந்தனர். சமீபத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி மரணமடைந்த பிறகு ரஜினிகாந்த் அரசியலுக்குள் நுழைவார் என்ற தகவல் வேகமாக பரவியது.

ரஜினி அரசியல்
சென்னையில் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூட போருக்கு தயாராகுங்கள் என பேசினார். மேலும் சிஸ்டம் சரியில்லை. மாற்றம் தேவை எனவும் பேசினார். ரஜினிகாந்தின் இந்த பேச்சு அரசியல் சார்ந்து இருந்தது. இதனால் ரஜினி அரசியலுக்குள் நுழைவது உறுதி என அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். மேலும் ரஜினி ரசிகர் மன்றத்தினரை அழைத்து அவர் விவாதித்தார். புதிதாக கட்சி தொடங்கவும், கட்சிக்கு சின்னம் வாங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டடன.

ரஜினி மீதான அரசியல் பார்வை
இருப்பினும் தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு ரஜினிகாந்த் தனது அரசியல் குறித்து தெளிவுப்படுத்தினார். தான் அரசியலுக்கு வரப்போவது இல்லை என பகிரங்கமாக அறிவித்து அரசியல் கட்சி துவக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதற்கிடையே தான் சமீபத்தில் ஆளுநர் ஆர்என் ரவியை ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். அப்போது ஆளுநரிடம் அரசியல் விஷயங்கள் பற்றி பேசியதாக ரஜினி தெரிவித்தார். இதனால் மீண்டும் ரஜினிகாந்த் மீதான அரசியல் பார்வை அதிகரித்தது.

திண்டுக்கல்லில் போஸ்டர்கள்
இந்நிலையில் தான் ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் வகையில் திண்டுக்கல் நகர் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. டிசம்பர் 12ல் ரஜினி காந்த பிறந்தநாள் கொண்டாட உள்ளார். இதற்காக திண்டுக்கல் மாவட்ட ரஜினி ரசிகர்கள் சார்பில் இப்போதே பிறந்தநாள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ‛‛கண் இமைக்கும் நொடியில் மாற்றம் இருக்கு. தமிழகம் இன்னும் காத்திருக்கு தலைவா'' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

எங்கெங்கு போஸ்டர்கள்
திண்டுக்கல் பேருந்து நிலையம், நாகல் நகர், மெயின் ரோடு உள்ளிட்ட நகர் பகுதிகளில் ரசிகர்கள் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மீண்டும் ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் வகையில் இந்த போஸ்டர்கள் அமைந்துள்ளன. நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்த பின்னரும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது படங்கள் வெளியாகும்போதும், அவரது பிறந்தநாளிலும் ரசிகர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

நடிப்பில் தீவிரம் காட்டும் ரஜினி
அதனடிப்படையில் தான் இந்த போஸ்டரும் திண்டுக்கல்லில் ஒட்டப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து மேலும் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகிஉள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கருத்தில் திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications