அபராத தொகையை ஆட்டையை போட்ட ஏட்டு.. சஸ்பெண்ட் செய்து திண்டுக்கல் எஸ்.பி. அதிரடி
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே வாகன ஓட்டிகளிடம் அபராதமாக வசூல் செய்த தொகையை கையாடல் செய்த தலைமைக்காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை சாவடிகள் மற்றும் தற்காலிக கண்காணிப்பு பீட்கள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் மற்றும் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.
அவ்வாறு அபராதமாக வசூலிக்கப்படும் தொகையானது மாவட்ட காவல்துறை மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். இந்நிலையில் அவ்வாறு திண்டுக்கல் சாணார்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து வசூலித்த தொகையை கையாடல் செய்த ஏட்டு கர்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது 9 சார்பு ஆய்வாளர்கள் தரப்பில் 229 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் 10.46 லட்சம் ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணத்தை சாணார்பட்டி காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வரும் பெண் தலைமைக் காவலர் கீதாவிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில், நத்தம் காவல் நிலையத்திற்கு அயல் பணிக்காக தலைமைக்காவலர் கீதா சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அபராதத் தொகையான ரூ.10.46 லட்சத்தை, முதல் நிலைக் காவலரான கர்ணன் என்பவரிடம் சார்பு ஆய்வாளர் பொன் குணசேகரன் முன்னிலையில் ஒப்படைத்து சென்றுள்ளார்.
ஆனால், அந்த பணத்தை கையாடல் செய்த கர்ணன், கடந்த அக்.25ம் தேதி முதல் முன்னறிவிப்பு இல்லாமல் பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் தலைமைக் காவலர் கர்ணன் அழைப்பை எடுக்கவில்லை, அவரது வீட்டில் சென்று காவலர்கள் பார்த்தபோதும் அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை. இந்நிலையில் அரசு பணத்தை கையாடல் செய்து தலைமறைவாக தலைமைக் காவலர் கர்ணன் குறித்து திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
புகார் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் வினோத் விசாரணை மேற்கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து முதல் நிலைக் காவலரான கர்ணனை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் மாவட்ட காவல்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து தலைமறைவான கர்ணன் குறித்து திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications