"அதுக்குன்னு.. அப்படியேவா வீட்டுக்குள்ள வருவ.." மெக்கானிக்கிற்கு தர்ம அடி கொடுத்த ஊர் மக்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில், மதுபோதையில், அதிவேகமாக கார் ஓட்டியதால், சாலையோரத்தில் உள்ள வீட்டுக்குள் கார் புகுந்தது. இந்த விபத்தில், வீடு முற்றிலுமாக சேதமடைந்த நிலையில், காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மது அருந்தி விட்டு வாகனங்கள் ஓட்டக்கூடாது, அவ்வாறு வாகனங்களை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் காவல்துறையினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், ஆங்காங்கே தீவிர வாகனச் சோதனையிலும் ஈடுபட்டு, மது அருந்தி வாகனங்களை ஓட்டுபவர்களை எச்சரித்தும், அபராதமும் விதித்து வருகின்றனர்.
மேலும், மது அருந்தாமல் வாகனங்களை இயக்குவது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. ஆனால், அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, ஒரு சிலர் மது அருந்தியபடியே வாகனங்களை இயக்கி, விபத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால், அவர்களுக்கு மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் பாதிப்பை உண்டு பண்ணுகிறார்கள். அப்படியொரு சம்பவம், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரங்கேறியுள்ளது.
பைக் மோதி தீப்பற்றி எரிந்த அரசு பஸ்.. பிளஸ் 2 மாணவர் பலி.. திண்டுக்கல் அருகே பதைபதைக்கும் விபத்து
மதுபோதையில் கார் ஓட்டிய நபர்
திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆர்.எம்.கே. நகரைச் சேர்ந்தவர் பிரசாத் என்பவர் கார் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் மது அருந்திய நிலையில், காரில் அவர்களுடன் பழனி - கோவை புறவழிச்சாலையில் வந்ததாக கூறப்படுகிறது. மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி வந்ததால், சாலையில் கார் தாறுமாறாக ஓடியது.
வீட்டுக்குள் புகுந்த கார்
மருத்துவநகர் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் உள்ள தண்டபாணி என்பவரின் வீட்டிற்குள் சீறிப் பாய்ந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால், வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். அதிவேகமாக வீட்டினுள் கார் புகுந்ததால் வீடு முழுவதுமாக இடிந்து விழுந்து சேதமடைந்தது. மேலும், இந்த விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பொதுமக்கள் தர்ம அடி
இதனிடையே, மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி வந்து வீட்டிற்குள் கார் புகுந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், கார் ஓட்டுநர் மற்றும் காரில் இருந்தவர்களை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு
இந்நிலையில், இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி அடிவாரம் போலீசார், மதுபோதையில் இருந்த இளைஞர்களை, பொதுமக்களிடம் இருந்து மீட்டு விசாரணை நடத்தினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தததோடு, விபத்தை ஏற்படுத்திய காரையும் பொதுமக்களின் உதவியோடு வீட்டில் இருந்து வெளியே எடுத்து பறிமுதல் செய்தனர். அப்போது, போலீசாரின் முன்னிலையிலேயே பொதுமக்கள் மறுபடியும் இந்த போதை இளைஞர்களை கடுமையாக தாக்கியதால் சலசலப்பு ஏற்பட்டது.
மதுபோதையில், அதிவேகமாக காரை ஓட்டி, சாலையோரத்தில் உள்ள வீட்டுக்குள் கார் புகுந்த சம்பவம், பழனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.