அடடா.. பொண்டாட்டி மேல அம்புட்டு பாசமாய்யா.. உருகிய போலீஸ்.. நழுவிய கைதி.. ஒரு அய்யோ பாவம் கதை!
போலீஸ் பிடியிலிருந்து கைதி ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
Recommended Video
வத்தலகுண்டு: நம்ம போலீஸ்காரர்களில் இன்னும்கூட பலர் ரொம்ப ரொம்ப அப்பாவியாகவே இருக்கிறார்கள். ஒரு கைதியை நம்பினது இவ்வளவு பெரிய குத்தமா போயிடுச்சு!!
தேனி அல்லி நகரத்தை சேர்ந்தவர் பொன்ராஜ். இவருக்கு வயது 47. இவரது பிசினஸ் ஆட்டைய போடுவதுதான். கொடைக்கானல் மலைப்பகுதியில் பொன்ராஜ் ரொம்ப ஃபேமஸ். இவர் கை படாத ஏரியாவே அங்கு குறைவுதான். அந்த அளவுக்கு திருட்டு தொழிலை போலீஸ் கண்ணில் சிக்காமல் செய்து வந்துள்ளார்.
[இன்னும் 39 நாள்தான்.. பொன் மாணிக்கவேலிடம் சிக்கி சிதற போவது யார் யார்!]
திண்டுக்கல் சிறை
இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு தாண்டிக்குடியில் ஒரு விவசாயி வீட்டில் 25 பவுன் நகையை அபேஸ் பண்ணிவிட்டார். இந்த வழக்கில் போலீசாரிடம் வசமாக சிக்கி கொண்டார் பொன்ராஜ். இதையடுத்து, கொடைக்கானல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திண்டுக்கல் சிறையிலும் போலீசார் அடைத்துவிட்டனர்.
ஊர் திரும்பினார்கள்
நேற்று முன்தினம் மீண்டும் கொடைக்கானல் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. அதனால் பாண்டி, சங்கீதாமணி என்ற இரண்டு போலீசாரும் பொன்ராஜை பாதுகாப்பாக அழைத்து வந்திருந்தார்கள். கோர்ட்டிலும் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் ஊருக்கு பஸ்ஸில் அழைத்து வந்து கொண்டிருந்தார்கள். வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டு வந்து சேர்ந்தார்கள்.
போன் தர்றீங்களா?
ராத்திரி 10.30 மணி இருக்கும். வத்தலகுண்டு வந்துவிட்டார்கள். போலீசாரிடம் பாத்ரூம் போக வேண்டும் என்று பொன்ராஜ் கூறினார். அதனால் கையில் கட்டப்பட்டிருந்த விலங்கை அவிழ்த்துவிட்டனர். பாத்ரூம் போய்ட்டு மீண்டும் வந்து பொன்ராஜ், போலீசாரிடம் "என் பொண்டாட்டிகிட்ட பேசணும்போல இருக்கு. கொஞ்சம் உங்க போனை தர்றீங்களா?" என்றார்.
பொண்டாட்டி வர்றா..
சரியென்று போலீசாரும் செல்போனை தந்தார்கள். மனைவிக்கும் போன் செய்தார் பொன்ராஜ். பேசிமுடித்துவிட்டு, செல்போனை திருப்பி கொடுத்துவிட்டார் பொன்ராஜ். பிறகு, "என் பொண்டாட்டிக்கு என்னை பாக்கணும்போல இருக்காம். அதனால இப்போ கிளம்பி வர்றாளாம். கொஞ்ச நேரத்துல வந்துடுவாள். அதனால அவளையும் பார்த்திட்டு உங்ககூட வந்திடறேனே" என்றார்.
அம்புட்டு பாசமாய்யா!
அடடா.. பொண்டாட்டி மேல அம்புட்டு பாசமாய்யா என்று உருகிப் போனார்கள் 2 போலீசாரும். அதனால் வத்தலகுண்டு பஸ் ஸ்டேண்டிலேயே காத்திருந்தனர். பொன்ராஜ் அப்பப்போ நாலாபுறமும் சாலையை சுற்றுமுற்றும் பார்த்து கொண்டே இருந்தார். நேரம் ஆக ஆக பொண்டாட்டி வரவேயில்லை.
கிடைக்கவே இல்லை
அந்த நேரத்தில் பாத்ரூம் போக அவிழ்த்துவிடப்பட்ட கைவிலங்கை மீண்டும் போலீசார் மாட்டவும் இல்லை. இதுதான் சாக்கு என்று மின்னலென ஜூட் விட்டார் பொன்ராஜ். இப்படி இவ்ளோ நேரம் உட்கார வைச்சி பொன்ராஜ் ஏமாற்றிவிட்டதை அறிந்து 2 போலீசாரும் அதிர்ச்சியடைந்தார்கள். ராத்திரி நேரத்தில் 2 போலீசாரும் எங்கெங்கோ பொன்ராஜை தேடினார்கள்.
போலீசார் வலை
காந்தி நகர் மெயின் ரோடு வழியாகத்தான் ஓடியதாக தெரிந்தது. ஆனாலும் கிடைக்கவேயில்லை. உடனடியாக வத்தலக்குண்டு போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டது. இப்போது வத்தலக்குண்டு போலீசாரும் வழக்குப்பதிவு செய்து போலீஸ் கண்ணில் மண்ணை தூவி விட்டு ஓடிய பொன்ராஜை தேடி வருகின்றனர்.