திண்டுக்கல்லில் நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி.. காவு வாங்கும் நீர்நிலைகள்.. 3 நாட்களில் 8 பேர் பலி
திண்டுக்கல்: வத்தலக்குண்டு பகுதியில் கண்மாயில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது வரை மாநிலம் முழுவதும் கடந்த மூன்று நாட்களில் 8 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் இந்த உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.

பருவமழை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பரவலான மழை காரணமாக நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இவ்வாறு இருக்கையில் கடந்த மூன்று நாட்களில் 8 சிறார்கள் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இது மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் (அக்.14) கோவை மாவட்டம் சூலுரில் 3 சிறார்கள் குளக்கரையில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

கோவை
சூலூர் அருகே உள்ள மதியழகன் நகரை சேர்ந்த மூன்று சிறார்கள் சூலூர் குளக்கரையில் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது தவறி குளத்தில் விழுந்துள்ளனர். இதனை பார்த்த ஆட்டோ டிரைவர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தீயணைப்பு வீரர்கள் வந்து சிறார்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், மூவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர்
இது இவ்வாறு இருக்க திருவள்ளூர் மாவட்டத்தில் மற்றொரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று (அக்.15) திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த மணவூர் பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் கொஸஸ்தலை ஆற்றில் குளித்துக்கொண்டிருந்துள்ளனர். இதில் எதிர்பாராத விதமாக அவர்கள் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். அவ்வழியாக சென்றவர்கள் ஆற்றின் கரையில் உடைகள் இருப்பதை பார்த்து சந்தேகத்தின் பேரில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் தேடி பார்த்ததில் இரண்டு சிறார்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

திண்டுக்கல்
இந்த இரண்டு சம்பவத்தின் பரபரப்பு குறைவதற்குள் தற்போது மற்றொரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் உள்ள கண்மாயில் மூன்று சிறார்கள் குளிக்க சென்றுள்ளனர் அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து தகவலறிந்த காவல்துறையினர் சிறுவர்களின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ச்சியாக மூன்று நாட்களில் 8 சிறார்கள் நீர் நிலைகளில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் தமிழ்நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications