திண்டுக்கல் திமுகவின் கோட்டை! அதற்கு ’இவர்’ தான் காரணம்! ஐபியை புகழ்ந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
திண்டுக்கல் : திமுகவிற்கு தான் வரலாறு உள்ளது மற்ற கட்சிகளுக்கு வரலாறு கிடையாது. திமுகவை குறைசொல்வது தான் அதிமுகவின் வரலாறு என தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்
திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா பைபாஸ் அருகில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சியினர் 7 ஆயிரம் பேருக்கு பொற்கிழி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி செந்தில்குமார் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் காந்திராஜன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உதயநிதி ஸ்டாலின்
விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது," திண்டுக்கல் மாவட்டத்திற்கு பல முறை வந்து உள்ளேன். அமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக உங்களை சந்திக்க வந்துள்ளேன். திண்டுக்கல் திமுக கோட்டை அதற்கு காரணம் ஐ.பெரியசாமி தான். அவர் கலைஞரோடு பயணித்தவர். ஒரு கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துகாட்டாக திமுக உள்ளது.

திமுகவிற்கு தான் வரலாறு
திமுகவிற்கு தான் வரலாறு உள்ளது மற்ற கட்சிகளுக்கு வரலாறு கிடையாது. திமுகவை குறைசொல்வது தான் அதிமுக வின் வரலாறு. திராவிடமாடல் பயிற்சி பாசறை கூட்டம் அதிக இடங்களில் நடத்தி உள்ளோம். அதிமுக சந்தர்பவாதம் கொண்ட கட்சி. ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் முதல்வர். துணை முதல்வர் என பங்களிப்போடு இருந்தவர்கள். தற்போது இருவரும் அடித்து கொள்கின்றனர்.

செல்லப்பிள்ளை
தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறிதிகளை தொடர்ந்து முதல்வர் நிறைவேற்றி வருகிறார். நேற்று கூட பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. நான் உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாகவே இருக்க விரும்புகிறேன். தற்போது அமைச்சராக உள்ளதாக கூடுதல் பொறுப்புடன் இருக்க வேண்டும் என பேசினார். தொடர்ந்து நத்தத்தில் திமுக கொடி ஏற்றி வைத்து மாவட்டத்தின் கடைசி நிகழ்ச்சியை முடித்துவிட்டு சிவகங்கை மாவட்டம் சென்றார் உதயநிதி ஸ்டாலின்.

பல்வேறு நிகழ்ச்சிகள்
முன்னதாக இன்று திண்டுக்கல்லில் திண்டுக்கல்லில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் மேற்குரத வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு பள்ளி குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி உமாசங்கர் என்பவருக்கு வேலைவாய்ப்புக்கான நிவாரண நிதியணையும் அமைச்சர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காவல்துறையினர் வரவேற்பு மரியாதை அளித்தனர்.












Click it and Unblock the Notifications