வேடசந்தூர் தொகுதி: ஜெயிக்கப் போவது சாதனையா? அன்பா? அனுதாபமா? ஆட்சி மாற்றம் எனும் விருப்பமா?
திண்டுக்கல்: தமிழகத்தில் எந்த ஒரு சட்டசபை தொகுதியிலும் இல்லாத ஒரு களநிலவரம் வேடசந்தூரில் நிலவுகிறது. ஆளும் அதிமுக வேட்பாளர், எதிர்க்கட்சி திமுக வேட்பாளர் இருவரில் யார் வெல்வார்கள்? என்பதுதான் இந்த தொகுதியில் திரும்பிய திசையெங்குமான விவாதம்.
வேடசந்தூர் சட்டசபை தொகுதியில் சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ. டாக்டர் வி.பி.பி. பரமசிவம் போட்டியிடுகிறார். திமுக வேட்பாளராக முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன் போட்டியிடுகிறார்.
வி.பி.பி. பரமசிவத்தின் தந்தை மறைந்த முன்னாள் துணை சபாநாயகர் வி.பி. பாலசுப்பிரமணியனுடன் தேர்தல் களத்தை எதிர்கொண்டவர் காந்திராஜன். இப்போது வி.பி. பாலசுபிரமணியனின் மகனையும் சட்டசபை தேர்தலில் எதிர்கொள்கிறார் காந்திராஜன்.

அதிமுக-வி.பி. பாலசுப்பிரமணியன்
இந்த தொகுதியில் விசித்திரமான ஒரு அரசியல் சூழல் உள்ளது. எம்.ஜிஆர். காலத்தில் துணை சபாநாயகராக இருந்து, பின்னர் ஜானகி அணிக்குப் போய் கடைசியில் ஜெயலலிதா தலைமையிலான ஒருங்கிணைந்த அதிமுகவில் இருந்தவர் வி.பி. பாலசுப்பிரமணியன். ஆனால் ஆர்.எம்.வீரப்பனை கட்சியில் இருந்து நீக்கியபோது சீனியரான வி.பி. பாலசுப்பிரமணியனையும் கட்டம் கட்டினார் ஜெயலலிதா. அத்துடன் வி.பி. பாலசுப்பிரமணியனுக்கும் அதிமுகவுக்குமான உறவு முறிந்து போனது.

மாஜி துணை சபாநாயகர் காந்திராஜன்
வி.பி. பாலசுப்பிரமணியனுக்கு எதிராக ஜெயலலிதாவால் அரசியல் களத்துக்கு கொண்டுவரப்பட்டு துணை சபாநாயகராகவும் ஆக்கப்பட்டவர் காந்திராஜன். பின்னர் அதிமுகவில் இருந்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார் காந்திராஜன்.

அதிமுக வேட்பாளர் வி.பி.பி. பரமசிவம்
காலம் மாற.. களமும் மாற.. இப்போது ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட வி.பி.பாலசுப்பிரமணியனின் மகன் 2-வது முறையாக அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். காந்திராஜன் மீண்டும் சட்டசபை தேர்தலில் திமுக வேட்பாளராக களம் காணுகிறார். இதற்கு அப்பால் இருவரும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள். அதிமுக எம்.எல்.ஏ. டாக்டர் பரமசிவத்துக்கு ஜாதிய அடிப்படையில் சித்தப்பா உறவு முறைதான் காந்திராஜன்.

வாக்க்காளர்களிடம் குழப்பம்
இந்த தொகுதியில் டாக்டர் பரமசிவம், காந்திராஜன் இருவரும் சார்ந்த ஒக்கலிகா ஜாதியினரே பெரும்பான்மையினராக உள்ளனர். இருவருக்கும் நெருக்கமான உறவினர்கள்தான் பெரும்பாலானவர்கள். அதனால் இந்த முறை யாருக்கு வாக்களிப்பது என்பதில் கணிசமான அளவுக்கு குழப்பமும் இருவரது உறவினர்களிடத்தில் இருக்கிறது.

அதிமுக-பாஜக கூட்டணி எதிர்ப்பு மனநிலை
தொகுதியில் நல்லது கெட்டது என அத்தனைக்கும் பரமசிவமும் காந்திராஜனும் ஆஜராகிவிடுவர். தொகுதியில் நாள்தோறும் பயணம் செய்து பல்வேறு நலத்திட்டப் பணிகளை ஒவ்வொரு கிராமத்துக்கும் செய்து கொடுத்தவர் பரமசிவம். அவரது செயல்பாடுகளின் அடிப்படையில் அவருக்குதான் வாக்களிக்க வேண்டும் என்கிற மனநிலையும் இருக்கிறது. இன்னொருபக்கம் பாஜகவுடன் வலம் வரும் அதிமுக என்பதால் வேறுவழியே இல்லாமல் காந்திராஜனை ஆதரிப்போம் என்கிற போக்கும் இருக்கிறது. அதாவது அதிமுக- பாஜக கூட்டணியின் விளைவாக இந்த நிலையை எடுக்கலாம் என நினைப்போரும் உண்டு.

காந்திராஜன் மீது அனுதாபம்
இன்னொரு பக்கம் கடந்த 2014 லோக்சபா தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் காந்திராஜன் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அப்போது எளிதாக வெல்ல வேண்டிய காந்திராஜன் பண பலம் இல்லாத நிலையில் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்... இம்முறை அவருக்கு நிச்சயம் வாய்ப்பு கொடுத்தே தீர வேண்டும் என்ற அனுதாபத்துடன் கணிசமான உறவினர்கள் களப் பணியில் இருக்கின்றனர்.

ஆட்சி மாற்ற விருப்பம்
அதேபோல் ஆட்சி மாற்றம் வேண்டும்; அதனால் சொந்தக்காரரான பரமசிவத்துக்குப் பதில் இன்னொரு சொந்தக்காரரான காந்திராஜனுக்கே ஓட்ட்ப் போடுவோம்.. அடுத்த முறை பரமசிவம் நிற்கும் போது பார்த்து கொள்ளலாம் என்கிற மனநிலையிலும் கணிசமான வாக்காளர்கள் உள்ளனர். இப்படி ஒரு விசித்திரமான சூழலுக்கு மத்தியில் இரு கட்சி வேட்பாளர்களும் பம்பரமாய் பிரசாரம் செய்கின்றனர். இதுவரை இல்லாத வகையில் இரு வேட்பாளர்களின் குடும்பத்தினர் முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் முழு வீச்சில் இறங்கி உறவுகளின் வாக்குகளை வேட்டையாடியும் வருகின்றனர். இப்படித்தான் ஒரு வித்தியாசமான களசூழல் வேடசந்தூர் தொகுதியில் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications