தென்காசி பஞ்சாயத்து.. 2 பேருமே இல்லை.. வெளியூர் எம்.எல்.ஏ பெயரை டிக் அடித்த தலைமை.. திமுகவில் பரபர!
தென்காசி : தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு செல்லதுரை, தனுஷ் குமார் ஆகியோரை விடுத்து, சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜாவுக்கு திமுக தலைமை டிக் அடித்திருப்பதாக தகவல்கள் பரபரக்கின்றன.
தமிழகத்தில் உள்ள 72 திமுக கழக மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரே ஒரு மாவட்டத்திற்கு மட்டும் இன்னும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படவில்லை.
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக தனுஷ் குமாரை நியமிக்கப்போவதாக தகவல் பரவியதால், சிட்டிங் மா.செ செல்லதுரை ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயத்தில் தர்ணா செய்தனர்.
மேலும், மாவட்ட துணை செயலாளர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த திமுகவைச் சேர்ந்த விஜய அமுதா எனும் பெண் நிர்வாகி, தென்காசி வடக்கு திமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
தீபாவளிக்கு தீபாவளி.. இட்லி கறிக்குழம்பு..கூடவே அம்மா சுட்ட முறுக்கு அதிரசம்
திமுக புதிய நிர்வாகிகள்
திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த அக்டோபர் 9ஆம் தேதி திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடந்தது. முன்னதாக, பல்வேறு மட்டங்களிலும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர். திமுகவின் 72 கழக மாவட்டங்களில் தென்காசி வடக்கு தவிர்த்து 71 மாவட்டங்களுக்கான மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் திமுக தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
தென்காசி வடக்கு
வாசுதேவநல்லூர், கடையநல்லூர் தொகுதிகளை உள்ளடக்கிய தென்காசி வடக்கு மாவட்டத்துக்கு மட்டும் இன்னும் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படவில்லை. தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் செல்லதுரை. அவருக்கு பதிலாக, திமுக எம்.பியான தனுஷ் குமாருக்கு வடக்கு மாவட்ட செயலாளர் பதவி தர உள்ளதாக தகவல் பரவியதால், செல்லத்துரை ஆதரவாளர்கள் வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளன்று சென்னை அறிவாலயத்தில் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு மாவட்டம் மிஸ்ஸிங்
இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதன் காரணமாக தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு மட்டும் நிர்வாகிகளை அறிவிக்காமல் இருந்து வருகிறது திமுக தலைமை. இந்நிலையில், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜா நியமிக்கப்பட இருப்பதாக திமுக வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.
புதிதாக நுழைந்த எம்.எல்.ஏ
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கான போட்டியில் செல்லத்துரையும், எம்.பி தனுஷ் குமாரும் இருந்த நிலையில், எம்.எல்.ஏ ராஜா பெயர் அடிபட்டு வருவது தென்காசி திமுகவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தனுஷ் குமாரை மாவட்ட செயலாளர் ஆக்க தென்காசி வடக்கு மாவட்ட திமுகவினர் மத்தியில் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், ராஜாவை மாவட்ட செயலாளர் ஆக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தொகுதிகள் மாற்றம்
சங்கரன்கோவில் தொகுதி தற்போது தென்காசி தெற்கு மாவட்டத்திற்குள் வருகிறது. தென்காசி தெற்கில் மா.செவாக சிவபத்மநாதன் இருக்கிறார். இதனால், சங்கரன்கோவில் தொகுதியை வடக்கில் சேர்த்து ராஜாவை மாவட்ட செயலாளராக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக, வடக்கில் இருக்கும் கடையநல்லூர் தொகுதியை தென்காசி தெற்கு மாவட்டத்தோடு இணைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பளு தூக்கும் வீரர்
சங்கரன்கோவில் திமுக எம்.எல்.ஏ ராஜா, பளு தூக்கு வீரரும் கூட. கடந்த ஆண்டு இறுதியில் துருக்கில் நடைபெற்ற ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று, வெண்கலப் பதக்கம் வென்றார் சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா. நியூசிலாந்தில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளிலும் இந்தியா சார்பாக சங்கரன் கோவில் எம்.எல்.ஏ ராஜா பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.