வந்தே பாரத் ரயிலில் ஏறிவிட்டு.. சிக்கிக்கொண்ட திமுக எம்எல்ஏக்கள்.. திடீர் பரபரப்பு
திருப்பத்தூர்: ஆம்பூரில் வந்தே பாரத் ரயிலை வரவேற்ற திமுக எம்.எல்.ஏக்கள் அந்த ரயிலில் ஏறி அடுத்த நிலையத்தில் இறங்க திட்டமிட்டனர். ஆனால் அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் கதவு திறக்கப்படாததால் வெளியில் இறங்க முடியாமல் உள்ளேயே சிக்கி தவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூரு வரை செல்லும் தென் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பச்சைக் கொடி காட்டியதும் ரயில் சீறிப்பாய தொடங்கியது.

வந்தே பாரத் ரயில்
முன்னதாக பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் நின்ற வந்தே பாரத் ரயிலுக்குள் ஏறி பார்வையிட்ட பிரதமர் மோடி, ரயிலில் பயணிகளுக்கு உள்ள சிறப்பு வசதிகளையும் பார்வையிட்டார். நேற்று முதல் நாள் என்பதால் வந்தே பாரத் ரயில் பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்பட்டது. தென் இந்தியாவில் ஓடும் முதல் வந்தே பாரத் ரயில் என்பதால், இந்த ரயிலை முதல் முறையாக பார்த்த பயணிகள் அதில் உள்ள வசதிகளை பார்த்து வியப்பாக பேசிக்கொண்டு இருந்தனர்.

வந்தே பாரத் ரயில் முன்பு செல்பி
பெங்களூருவில் இருந்து காலை 10.10 மணியளவில் புறப்பட்ட இந்த ரயில், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு மதியம் 2 மணிக்கு வந்து சேர்ந்தது. வந்தே பாரத் ரயிலுக்கு அங்கு மலர்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. வந்தே பாரத் ரயில் முதல் நாள் என்பதால் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் சிறிது நேரம் நின்று சென்றது. ரயில் பயணிகள் பலரும் வந்தே பாரத் ரயில் முன்பு செல்பி எடுத்து உற்சாகம் அடைந்தனர். பல ரயில் நிலையங்களில் பாஜகவினர் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

ரயிலில் ஏறிய திமுக எம்.எல்.ஏக்கள்
அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலை பயணிகள் வரவேற்றனர். ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ தேவராஜ், ஆம்பூர் திமுக எம்எல்ஏ-வான விஸ்வநாதன் உள்பட திமுக நிர்வாகிகள் மற்றும் பாஜகவினர் வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆம்பூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் திமுக எம்.எல்.ஏக்கள், ரயிலில் ஏறி அடுத்த ரயில் நிலையத்தில் இறங்க திட்டமிட்டனர்.

கதவுகள் திறக்கப்படாததால்..
ஆனால், வந்தே பாரத் ரயிலின் கதவுகள் அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் திறக்கப்படாததால் வெளியில் இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அடுத்த ரயில் நிலையத்தில் இறங்க திட்டமிட்ட தி.மு.க எம்.எல்.ஏக்கள், இரண்டு ரயில் நிலையங்கள் தாண்டி மேல்பட்டி ரயில் நிலையத்தில் இறங்கினர். இதேபோல் ரயிலில் பயணித்த திமுக நிர்வாகிகளும் மேல்பட்டி ரயில் நிலையத்தில் இறங்கி பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் சிறிது நேரம்
ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் சிறிது நேரம் நின்று சென்ற வந்தே பாரத் ரயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் இரவு 7 மணியளவில் வந்தது. தேசியக்கொடி இசைக்கப்பட்டு ரயிலுக்கு உற்சாக வரவேற்பு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அளிக்கப்பட்டது. ரயிலில் உள்ள சொகுசு வசதிகளையும் பளபளப்பான பெட்டிகளையும் பார்த்து ரயில் பயணிகள் வியந்தனர். பிற ரயிலுக்கு காத்திருந்த பயணிகளும் ஓடிச்சென்று செல்பி எடுத்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications