சிஎஸ்கே பட்டையை கிளப்பியது எப்படி.. சீக்ரெட்டை சொன்ன தோனி.. தோல்வியை மாற்றும் 'வைர வரிகள்'
துபாய்: தோல்வியால் துவண்டு விடாமல் பீனிக்ஸ் பறவையாய் எழுச்சி பெறுவது எப்படி என்பதை, தல தோனியிடம் கற்றுக் கொள்ளலாம்.
2008ம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பித்தது. அன்று முதல் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் வரை எப்போதுமே பிளே ஆப் சுற்றுக்குள் செல்லாமல் இருந்தது இல்லை தோனி படை.
கடந்த முறைதான் முதல் முறையாக, பிளேஆப் சுற்றுக்கு சிஎஸ்கே போக முடியவில்லை. அரபு எமிரேட்சில் வைத்து போட்டி நடைபெற்றதால், சிஎஸ்கே திணறிவிட்டது என்ற விமர்சனங்கள் எழுந்தன.

விமர்சனங்கள்
தோனி கேப்டன்ஷி சரியில்லை என்று விமர்சனங்களும், எல்லாரும் வயதில் மூத்தவர்கள் என்று வீரர்கள் பற்றி சிலரும் விமர்சனங்களை மாறி மாறி வைத்தனர். ஆனால் அதே எமிரேட்சில் வைத்து நடைபெற்ற நடப்பாண்டு ஐபிஎல் தொடரில், முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது சிஎஸ்கேதான்.

சிஎஸ்கே கோப்பை
இதோ.. இப்போது, ஐபிஎல் கோப்பையையும் கைப்பற்றி அசத்தி விட்டது சிஎஸ்கே. தன்னம்பிக்கைக்கும் தலை கணத்திற்கும் சிறு வித்தியாசம்தான் உண்டு. தோனியிடமிருந்தது தன்னம்பிக்கை. எனவேதான், நேற்று கோப்பையை வென்ற பிறகும், ஒரு சிறு புன்னகையை காட்டியபடி, எதுவுமே நடக்காத மாதிரி நடந்து போனார் தோனி.
Recommended Video

கடமையை செய்யுங்கள்
பின்னர் பரிசளிப்பு விழாவில், தோனியிடம், 2020ம் ஆண்டு, ஐபிஎல் முதல் 2021 ஐபிஎல் வரையில் என்ன உங்களை மாற்றியது என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி, வெற்றியோ தோல்வியோ, நடக்க வேண்டியவற்றில் மட்டும் கவனம் வைக்க வேண்டும். பலனில் பற்றுதல் இல்லாமல், கடமையை மட்டும் செய்ய வேண்டும். நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்காத நேரங்களில் உங்களுக்கு உண்மையான பரிட்சை என்று அர்த்தம். அந்த காலகட்டத்தில்தான் நீங்கள் கூடுதலாக மரியாதையை உருவாக்க முடியும். விடாமுயற்சி மற்றும் அதற்கான வழிகளில் கவனம் வைப்பதுதான் வெற்றிக்கான ரகசியம். இவ்வாறு தோனி தெரிவித்தார்.

வெற்றி
கடமையை செய்ய வேண்டும், பலனை எதிர்பார்க்க கூடாது என்பது பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறும் வார்த்தைகள். தோனியும் அதேபோல தெரிவித்துள்ளார். ஒருவேளை, விமர்சனங்களாலோ, தோல்வியாலோ, தனது கடமையை தோனி மறந்திருந்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் இப்படி ஒரு வெற்றியை பதிவு செய்திருக்க முடியாது என்பது உண்மை.












Click it and Unblock the Notifications