இந்தியர்களே கவனம்! துபாய் போலீஸ் கொடுத்த மிக முக்கியமான எச்சரிக்கை.. பெரிய பிரச்சினையாகிடுமாம்
துபாய்: வேலைக்காக மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன்றான துபாய்க்கு செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே துபாய்க்கு செல்லக் காத்திருக்கும் இந்தியர்களைக் குறிவைத்து ஒரு மிகப் பெரிய மோசடி நடக்கிறதாம். இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கிடையே துபாய் போலீசார் இது குறித்து முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேர் இந்தியாவில் இருந்து ஐக்கிய அமீரகத்திற்கு வேலைக்குச் செல்கிறார். அதிலும் குறிப்பாகத் தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிகப்படியானோர் ஐக்கிய அமீரகத்திற்கு, அதிலும் துபாய்க்கு செல்கிறார்கள். நம்மை சுற்றி உள்ளவர்களிலேயே கூட நிச்சயம் சிலர் துபாய் செல்லும் முயற்சிகளில் இறங்கி இருப்பார்கள்.

மோசடி
இருப்பினும், சமீப காலமாகவே இதை வைத்து ஒரு மோசடி நடக்கிறதாம். அதாவது உங்களுக்கு துபாயில் வேலை கிடைத்துவிட்டது.. விசாவையும் நாங்களே ரெடி செய்து வருகிறோம் என மெயில் வரும். ஆனால், அப்படி வரும் மெயில் எல்லாமே உண்மை இல்லை. சமீப காலமாகவே துபாயில் வேலை வாங்கி தருகிறோம், விசா வாங்கி தருகிறோம் எனச் சொல்லி நடக்கும் மோசடிகள் நடந்து வருகிறதாம்.
மோசடி
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து இப்போது துபாய் போலீசாரே எச்சரிக்கை விடுத்துள்ளனர். வேலை தேடுபவர்களைக் குறிவைத்து, சட்டப்பூர்வமற்ற மற்றும் மோசடியான வேலை விசா சலுகைகளை வழங்கி, சில கும்பல்கள் ஏமாற்றி பணத்தைப் பறித்து வருவதாக துபாய் போலீசார் கூறுகிறார்கள். இவை அனைத்துமே சட்டவிரோதமானவை என்றும் முறையான சட்டப்பூர்வ வழிகளை மட்டுமே விசா மற்றும் வேலைவாய்ப்புக்குப் பின்பற்றுமாறும் துபாய் காவல்துறை வலியுறுத்துகிறது.
அறிவுறுத்தல்
வேலை விசா பெறுவதற்கு அதிகாரப்பூர்வ அரசு வழிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் உரிமம் பெற்ற ஏஜெண்டுகளை மட்டுமே வேலைக்காகத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ள துபாய் காவல்துறையின் மோசடி தடுப்பு மையம், அதுவே பாதுகாப்பான வழி என்பதையும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. அங்கீகரிக்கப்படாத நபர்களிடம் இருந்து வரும் வேலைவாய்ப்பு குறித்த ஆஃபர்களை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.. மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், துபாய் போலீசார் அதிகாரப்பூர்வமாகவே எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.
என்ன செய்ய வேண்டும்!
மேலும், மோசடிகளிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் போலீசார் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளனர்.
- முதலில் பணத்தை செலுத்தும் முன், வேலை ஆஃபரின் நம்பகத்தன்மையை அதிகாரப்பூர்வ ஏஜென்சிகளை தொடர்பு கொண்டு சரிபார்க்கவும்.
- விசா மற்றும் வேலைவாய்ப்பு ஆவணங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட அலுவலகங்கள்/ அரசு தளங்களை மட்டுமே பயன்படுத்தவும்.
- கண்டிப்பாக விசாவை பெற்றுத் தருவோம் அல்லது குறுக்குவழிகள் துபாய் வர வழிகளை உள்ளன என உறுதியளிக்கும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
யாருக்காவது இதுபோல மோசடியான வேலை அல்லது விசா ஆஃபர் வந்தால் உடனடியாகப் புகாரளிக்கவும் துபாய் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
துபாய் போலீஸ் ஸ்மார்ட் ஆப், இ-க்ரைம் தளம் அல்லது 901 மூலம் புகார்களைப் பதிவு செய்யலாம். இதுபோல புகார் அளிப்பதன் மூலம் நீங்கள் பிரச்சினையில் மாட்டாமல் தப்பிக்கலாம். மேலும், குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் மற்றவர்களும் இந்த மோசடிகளில் ஏமாறுவது தடுக்கப்படும்.












Click it and Unblock the Notifications