குவைத் தீ விபத்து.. 4 பேர் துடிதுடித்து மரணம்.. இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய அன்றே சோகம்!
குவைத் சிட்டி: குவைத் நகரில் வசித்து வரும் இந்தியக் குடும்பத்தினரின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த தம்பதி, அவர்களின் இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக மூச்சு திணறி உயிரிழந்தனர். அவர்கள் கேரளாவில் விடுமுறையை முடித்துக் கொண்டு குவைத் திரும்பிய நிலையில், அதே நாள் இரவு இந்த சோகம் நடந்துள்ளது.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவர்கள் படிப்பு, வேலைவாய்ப்பு என பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகம் செல்கிறார்கள்.

கேரள குடும்பம்: அதன்படி குவைத் நாட்டில் வசித்து வந்தவர் மேத்யூஸ். இவர் கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர். இவரது மனைவி லினி ஆபிரகாம்.. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் சமீபத்தில் தான் தங்கள் விடுமுறையைக் கழிக்க இந்தியா வந்துள்ளனர். விடுமுறை முடிந்த குவைத் திரும்பிய அதேநாளில் அவர்கள் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேரும் மூச்சு திணறி உயிரிழந்தனர்.
குவைத் நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கு இரண்டாவது மாடியில் உள்ள ஏசி ஷார்ட் சர்க்யூட் ஏற்படவே இதனால் அங்கு எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் கறுப்பு புகை வெளியான நிலையில், அதில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர்..
தீ விபத்து.. பலியானோர் குடும்பத்துக்கு குவைத் ரூ12.50 லட்சம் வழங்க உத்தரவு
உயிரிழப்பு: இது தொடர்பாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகையில், "இந்த குடும்பத்தினர் கேரளாவில் விடுமுறையை முடித்துக் கொண்டு அன்று மாலை 4 மணியளவில் தான் வீடு திரும்பியுள்ளனர். மேத்யூஸ் ராய்ட்டர்ஸ் தளத்தில் பணிபுரிந்தார்.. அவரது மனைவி லினி அல் அஹ்மதி கவர்னரேட்டில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக இருந்தார். அவர்களின் குழந்தைகள் குவைத்தில் உள்ள பவன்ஸ் பள்ளியில் படித்து வந்துள்ளனர்.
மேத்யூ கடந்த 15 ஆண்டுகளாக குவைத்தில் வேலை செய்து வருகிறார். அவர்கள் விடுமுறை முடிந்து கொண்டு வியாழன் இரவு தான் நெடும்பாசேரி விமான நிலையத்தில் இருந்து குவைத்துக்கு புறப்பட்டனர். அப்போது தான் எதிர்பாராத விதமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
நடவடிக்கை: கேரளாவில் உள்ள மேத்யூ குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், நான்கு இந்தியர்களின் உடல்கள் விரைவில் சொந்த நாட்டுக்குக் கொண்டு வரப்படுவதை உறுதி செய்வதாகவும் குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் தான் குவைத் நாட்டில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 45 இந்தியர்கள் உயிரிழந்த நிலையில், மீண்டும் அங்கே தீ விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
இந்தியத் தூதரகம்: இந்த தீ விபத்து தொடர்பாக, குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தனது ட்விட்டரில், "வெள்ளி இரவு அபாசியாவில் உள்ள அவரது குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் மேத்யூஸ், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு இந்தியத் தூதரகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது. அவர்களது உடல்கள் விரைவாகத் தாயகம் எடுத்துச் செல்வதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்












Click it and Unblock the Notifications