40க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட குவைத் தீ விபத்து! இந்தியர்களுக்காக தூதரகம் அவசர உதவி எண் அறிவிப்பு!
துபாய்: குவைத் நாட்டின் பேங்காஃப் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 இந்தியர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் அங்கிருக்கும் நிலை குறித்து அறிய இந்திய தூதரகம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.
குவைத்தின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் மங்காஃப் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தின் பணிகள் நடைபெற்று வந்தன. அதில் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர்.

இந்நிலையில் குவைத் நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு அந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய அந்த தீ கட்டிடத்தின் பல பகுதிகளுக்கும் பற்றியது. அந்த கட்டிடத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி இருந்த நிலையில் அவர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரான கேஜி ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான அந்த கட்டிடத்தில் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் ஊழியர்களும் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த விபத்தில் சுமார் 40 பேர் பலியானதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்களில் ஐந்து பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனவும் இரண்டு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் மூன்று பேர் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.
தீ விபத்துக்கு குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலருக்கு அதிக அளவில் காயங்கள் ஏற்பட்டு இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விபத்துக்கு காரணமான கேரளாவை சேர்ந்த உரிமையாளர் ஆபிரகாமை கைது செய்ய வேண்டும் என குவைத் அரசு உத்தரவிட்டிருக்கிறது. மேலும் துணை பிரதமர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக நேரடியாக அங்கே சென்று நடக்கும் மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் அங்கிருக்கும் நிலை குறித்து அறிய இந்திய தூதரகம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. +965-65505246 என்ற தூதராக உதவி எண்ணில் தீ விபத்து உதவிகள் மற்றும் சந்தேகங்களுக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க தூதரகம் உறுதியுடன் உள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications