வெள்ள பாதிப்பிலிருந்து மீளாத துபாய்.. இரண்டாவது நாளாக இன்றும் சென்னை டூ UAE விமானங்கள் ரத்து!
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
ஏப்.15 மற்றும் ஏப்.16ம் தேதிகளில் கனமழை பெய்யும் என அந்நாட்டு வானிலை மையம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது. அதன்படி இடி, மின்னலுடன் மழையும், சூறாவளிக்காற்றும் வெளுத்து வாங்கியிருக்கிறது. மழை காரணமாக துபாயின் மிக முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சுரங்க பாதைகளில் மழை நீர் தேங்கியதால் அவை மூடப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் முட்டி அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளது.

தொடர் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பல்வேறு நிறுவனங்கள் வீட்டிலிருந்தே தங்கள் வேலையை செய்யுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. ஓமனை பொறுத்த அளவில் மழை வௌ்ளத்தில் சிக்கி பள்ளி வாகனம் அடித்துச் செல்லப்பட்டதில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதேபோல மழையில் சிக்கி தற்போது வரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அளவுக்கு பெரும் மழை வெள்ளத்தை நாங்கள் பார்த்ததில்லை என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
இந்த மழைக்கு காரணம் செயற்கை முயற்சிகள்தான் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது துபாய் உள்ளிட்ட அரபு நாடுகள் இயல்பில் அதிக வெப்பம் நிறைந்த பகுதிகளாகும். இங்கு மழையை ஏற்படுத்த செயற்கை முறையில் அவ்வப்போது சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் எடுத்த முயற்சிகள் காரணமாக இந்த பெருமழை பெய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
கடந்த 75 ஆண்டுகளில் இப்படியான மழை பெய்ததில்லை என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் ஆண்டுக்கு 140-200 மி.மீ அளவுதான் மழையை பெறும். துபாயில் ஆண்டுக்கு 97 மி.மீ அளவுக்குதான் மழை பெய்யும். ஆனால், ஏப்.15-16 தேதியில் 24 மணி நேரத்தில் 254.8 மி.மீ மழை பெய்திருக்கிறது. இதனால் ஆண்டுக்கு சுமார் 8 கோடி பயணிகளை கையாளும் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் இயக்கம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று மட்டும் 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. 440 விமானங்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, விமான பயணிகள் பலர் சுமார் 12 மணி நேரத்திற்கும் அதிகமாக துபாய் விமான நிலையத்திலேயே சிக்கியிருக்கின்றனர்.
மறுபுறம் சென்னையிலிருந்து துபாய்க்கு செல்லும் விமானங்கள் இரண்டாவது நாளாக ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. சென்னையிலிருந்து அபுதாபி, சார்ஜா, குவைத்துக்கு செல்லும் 12 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications