துபாயில் தங்கம் வாங்கிய நபர்.. ஒரே மாசத்தில் 50 மடங்கு லாபம்.. செம சர்ப்ரைஸ் தான்
துபாய்: துபாயில் கடந்த 20 ஆண்டுகளாகச் சாதாரண வேலை செய்து கொண்டு இருந்த சுமித் என்பவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இவர் ஒரு தொகைக்குத் தங்கம் வாங்கிய நிலையில், அதை விட 50 மடங்கு அதிக லாபம் இவருக்குக் கிடைத்துள்ளது. சுமித் அப்படி என்ன ஜெயித்தார்.. இது எப்படிச் சாத்தியமானது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
துபாயில் உள்ள ஒரு கால் சென்டரில் பணிபுரியும் இலங்கை நாட்டை சேர்ந்தவர் சுமித்.. துபாயில் சாதாரண வேலை செய்து வந்த இவருக்குக் கூரையைப் பிச்சு கொண்டு அதிர்ஷ்டம் கொட்டியுள்ளது.

50 மடங்கு லாபம்
அதாவது 15,000 திர்ஹம்களுக்கு (சுமார் ₹3,70,401) ஒரு தங்க பிஸ்கட்டை இவர் வாங்கிய நிலையில், ஒரு சொகுசு காரே இவருக்குச் சொந்தமாக மாறியுள்ளது. அந்தச் சொகுசு காரின் மதிப்பு இவர் வாங்கிய தங்க பிஸ்கட்டை காட்டிலும் 50 மடங்கு அதிகமாகும். இதன் மூலம் சுமித் இப்போது தங்க மெர்சிடிஸ் சொகுசு காரின் உரிமையாளராக மாறியிருக்கிறார்.
இன்னுமே நடந்ததை நம்ப முடியவில்லை என்கிறார் சுமித். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நான் செய்த முதலீட்டை விட 50 மடங்குக்கு மேல் லாபம் கிடைத்தது. இந்தச் செய்தியை என்னால் இதுவரை நம்பவே முடியவில்லை" என்றார்.
என்ன நடந்தது!
கடந்த 20 வருடங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்துவரும் சுமித், துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட்டில் இந்தத் தங்க பிஸ்கட்டை வாங்கினார். அந்தப் பகுதிக்கு அவர் இதுவரை சென்றது கூட இல்லையாம். இப்போது தான் முதல்முறையாக அங்குச் செல்கிறார். தங்கத்தை வாங்கிய போது அவருக்குக் குலுக்கல் கூப்பன்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு 500 திர்ஹம்களுக்கும் ஒரு கூப்பன் என்ற விகிதம், 15,000 திர்ஹம்களுக்கு நகை வாங்கியதால், அவருக்கு 30 கூப்பன்கள் கிடைத்தன. அதில் ஒரு கூப்பன் தான் அவரின் வாழ்க்கையை முழுமையாக மாற்றியது.
எதிர்பார்க்கவே இல்லை
டிசம்பர் 11 முதல் பிப்ரவரி 8 வரை நடைபெற்ற துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட்டின் போட்டியின் முடிவில் குலுக்கல் நடந்தது. அதில் சுமித் வெற்றியாளராக மாறினார்.. இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அன்று நகை வாங்க அங்குச் சென்றபோது, ஆசைக்காக அந்தச் சொகுசு கார் பக்கத்தில் நின்று போட்டோ எடுத்துக் கொண்டேன். அந்தக் காரை பார்க்கும்போதே ஆசை இருந்தது உண்மைதான். ஆனால், ஒருபோதும் அந்த காரை நான் வெல்வேன் என்று நினைக்கவில்லை. அந்த கார் நமக்குக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என யோசித்தேன். அது நடந்துவிட்டது" என்றார்.
செம சர்ப்ரைஸ்
இப்படியொரு சொகுசு கார் தனக்குச் சொந்தமாகும் என்று ஒருபோதும் கற்பனை செய்ததில்லை என சுமித் தெரிவித்தார். அன்றைய தினம் வழக்கம் போல நைட் ஷிப்ட் முடித்துக் கொண்டு வீடு திரும்பிய சுமித் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது தான் அந்த மேஜிக் போன் கால் வந்தது. அவர் மேலும் கூறுகையில், "தூக்கத்தில் தான் போனை எடுத்துப் பேசினேன்.. அவர்கள் எனது மெயிலை செக் செய்யச் சொன்னார்கள். அதைப் பார்த்தபோது அடைந்த மகிழ்ச்சியை விவரிக்கவே முடியாது. ஆரம்பத்தில் இது உண்மை தானா என நம்பவே முடியவில்லை" என்றார்..
பலரும் அந்தக் காரை விற்றுவிட்டு அதில் பணத்தை வேறு செலவுகளுக்குப் பயன்படுத்தும்படி ஆலோசனை கொடுத்துள்ளனர். இருப்பினும், காரை விற்கும் எண்ணம் இல்லை என்கிறார் சுமித். அவர் மேலும், "நான் காரை ஓட்டுவேன். இப்போதைக்கு அதை விற்கப் போவதில்லை.. இது எனக்கு மிகவும் சிறப்பானது. கடந்த 20 ஆண்டுகளாக நான் அமீரகத்தில் வசித்து வருகிறேன். இதுதான் எனக்குப் பெரிய வெற்றி போல இருந்தது" என்றார்.












Click it and Unblock the Notifications