பாகிஸ்தானை மொத்தமாக கை கழுவிய அமீரகம்.. இந்தியாவுக்கு UAE அதிபர் வந்துசென்றவுடன் நடந்த மாற்றம்!
துபாய்: சமீபத்தில் தான் அமீரக அதிபர் இந்தியாவுக்கு வந்து சென்றிருந்த நிலையில், புவிசார் அரசியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் முக்கியமான திட்டம் ஒன்றில் இறங்குவது தொடர்பாக அமீரகம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், இந்தியப் பயணம் முடிந்த கையோடு அத்திட்டத்தில் இருந்து அமீரகம் வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் சமீபத்தில் தான் இந்தியா வந்து சென்றார். வெறும் 3 மணி நேரம் மட்டுமே அவர் இந்தியாவில் இருந்தாலும் கூட அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. உலகமே கவனிக்கும் பயணமாக அது மாறியது. இந்தப் பயணம் இந்தியாவுக்குப் பல்வேறு வகைகளிலும் நன்மையைக் கொடுத்தது.

பாகிஸ்தான் வேண்டாம்
அதேபோல தெற்காசியப் புவிசார் அரசியலில் பாகிஸ்தானுக்கும் மறைமுகமான பின்னடைவைக் கொடுத்தது. இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானில் முக்கியமான திட்டத்தில் இருந்து அமீரகம் வெளியேறியது. அங்குள்ள இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தை இயக்குவது குறித்துக் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே பாகிஸ்தானுடன் அமீரகம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்தியப் பயணம் முடிந்த கையோடு அத்திட்டத்தை அமீரகம் கைவிட்டுள்ளது.
பாகிஸ்தானிய ஊடகமான 'தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன்', அமீரகம் இத்திட்டத்தில் இருந்து வெளியேறுவதை உறுதி செய்துள்ளது. இத்திட்டத்தின் மீது அமீரகம் ஆர்வம் இழந்துவிட்டதாகவும் உள்ளூர் பார்ட்னரை கூட நியமிக்கவில்லை என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த முறிவுக்கு அரசியல் காரணங்கள் இருப்பதாக அதில் எந்தவொரு தகவலும் கூறப்படவில்லை.
பின்னணி
இருப்பினும், ஐக்கிய அமீரகம் மற்றும் சவுதி அரேபியா இடையே வளர்ந்து வரும் விரிசலுக்கு மத்தியில் இச்சம்பவம் நிகழ்ந்தது. ஒரு காலத்தில் மிக நெருக்கமாக இருந்த சவுதிக்கும் அமீரகத்திற்கும் இடையே இப்போது மோதல் இருக்கிறது. ஏமனில் போராளிகளுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதற்கிடையே பாகிஸ்தான் சவுதி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது, அமீரகத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
மறுபுறம் ஐக்கிய அமீரகம் இந்தியாவுடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. சவுதி அரேபியா பாகிஸ்தானின் ராணுவத் திறன்களை நம்பியிருக்க, அமீரகம் இந்தியாவுடன் பாதுகாப்புத் துறையில் மேலும் நெருங்கி வருகிறது. இது பிராந்தியத்தின் மாறும் அதிகாரச் சமநிலையை எடுத்துக்காட்டுகிறது.
பாகிஸ்தான்- அமீரகம்
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தானின் மிகப் பெரிய வர்த்தகப் பார்ட்னராக ஐக்கிய அமீரகம் இருந்தது. ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் அங்குப் பணிபுரிந்தனர். பாதுகாப்பு, எரிசக்தி, முதலீட்டுத் திட்டங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டன. ஆனால், காலப்போக்கில் உரிம சர்ச்சைகள் உள்ளிட்ட பல காரணங்களால் இரு நாட்டு உறவுகள் பாதிக்கப்பட்டன.
பாகிஸ்தான் அரசு நிர்வாகத்தில் ஊழல் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துவிட்டது. இதனால் அங்குள்ள பொதுத்துறை நிறுவனங்கள் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் போன்ற சவாலான சூழல்களில் விமான நிலையங்களை நிர்வகித்த அனுபவம் அமீரகத்திற்கு உண்டு. இருப்பினும், இஸ்லாமாபாத் திட்டத்திலிருந்து விலகியிருக்கிறது என்றால் அங்கு நிலைமை எந்தளவுக்கு மோசம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
இந்தியா- அமீரகம்
மாறாக, இந்தியா அமீரகம் இடையேயான உறவு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. அமீரக அதிபரின் பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதேபோல அமீரகச் சிறைகளில் உள்ள 900 இந்தியக் கைதிகளை விடுவிக்கவும் அமீரக அதிபர் உத்தரவிட்டிருந்தார். இப்படி பாகிஸ்தானிலிருந்து விலகும் அமீரகம், மெல்ல இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற ஆரம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications