தர்மம் நிச்சயம் வெல்லும்..கே.பி.முனுசாமி நம்பிக்கை.. தென்னரசுவை வேட்பாளராக ஏற்றுக்கொள்வாரா ஓபிஎஸ்?
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வேட்பாளரை தேர்வு செய்ய எடப்பாடி பழனிச்சாமி அணி பரபர ஆலோசனையில் ஈடுபட்டுள்ள நிலையில் தர்மம் நிச்சயம் வெல்லும் என்று கூறியுள்ளார் கே.பி.முனுசாமி.
ஈரோடு: தொண்டர்கள் முழுவதும் கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருக்கின்றனர். தர்மம் எப்பொழுதும் வெல்லும் என்று கூறியுள்ளார் கே.பி. முனுசாமி. பொதுக்குழு நிர்வாகிகள் தேர்வு செய்தாலும் ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளராக தென்னரசுவை ஏற்றுக்கொள்வாரா ஓ.பன்னீர் செல்வம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை பஞ்சாயத்திற்குப் பிறகு ஓயாத சண்டையாக உள்ளது. கடந்த ஜூன் மாதம் பொதுக்குழு கூடிய போது மேடை ஏறிய ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களால் அவமானப்படுத்தப்பட்டார். இதனையடுத்து தனது ஆதரவாளர்களுடன் கோபமாக வெளியேறினார்.
ஜூலை 11ஆம் தேதியன்று மீண்டும் அதிமுக பொதுக்குழு கூடியது. அந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அன்றைய தினமே ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்ட ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தான்தான் ஒருங்கிணைப்பாளர் என்றும் தனக்குத்தான் அதிகாரம் இருப்பதாக கூறி மாவட்ட செயலாளர்களை நியமித்து கூட்டமும் நடத்தினார்.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து வழக்கு தொடந்தார். அந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது வாத விவாதங்கள் முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக முகாமில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்னாள் எம்எல்ஏ தென்னரசும், அதேபோன்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் என்பவரும் தனித்தனியாக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளர் விண்ணப்ப படிவத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற எனது கையெழுத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது.
2 நாள் தான் ‛டைம்’.. ஈபிஎஸ் ஆலோசனையில் முக்கிய முடிவு..பொதுக்குழு உறுப்பினர்களுக்கு உத்தரவு! என்ன?
இதனையடுத்து தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ளவும் இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி புதிய இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணையின்போது, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க முடியாது என்று தேர்தல் ஆணையமும், அதேப்போன்று எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் நேற்று முன்தினம் பதில் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த மேற்கண்ட இடைக்கால மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் எச்.ராய் ஆகியோர் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "எடப்பாடி பழனிசாமியை நாங்கள் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கவில்லை. அதே நேரத்தில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்படவில்லை. அதிகாரப்பூர்வமாக ஒருவர் தேர்தெடுக்கும் பட்சத்தில் சின்னத்தை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் எங்களால் எந்தவித முடிவும் எடுக்க முடியவில்லை என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான குருகிருஷ்ணகுமார், பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதால் இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து தான் முடிவெடுக்க முடியும். மேலும் வேட்பாளர் விண்ணப்பப் படிவத்தில் ஒங்கிணைப்ளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வத்தின் கையெழுத்து கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் ஈரோடு இடைத்தேர்லில் வேட்பாளர் விண்ணப்பத்தில் கையெழுத்து கேட்டால் அதனை போடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு தான் எங்களை நிராகரிக்கிறார்கள் என தெரிவித்தார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமாசுந்தரம், இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்தை ஏற்க முடியாது என தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,அதிமுகவை பொறுத்தமட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அக்கட்சியில் பொதுக்குழுவே வேட்பாளரை முடிவு செய்யும். மேலும் பொதுக்குழு கூட்டப்படும் போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உட்பட ஆகியோர் கலந்து கொள்ளலாம்.
நேரமின்மை காரணமாக ஒரு வேளை பொதுக்குழுவை திடீரென கூட்ட முடியவில்லை என்றால் வேட்பாளர் பெயரை சர்குலேஷன் முறையில் அதாவது தீர்மானத்தை சுற்றுக்கு விட்டு முடிவு செய்யலாம். இதையடுத்து இறுதி செய்யப்படும் வேட்பாளரின் பெயரை கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த உத்தரவு ஈரோடு கிழக்கு இடைதேர்தலுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது என உத்தரவிட்டு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடைக்கால மனு மீதான விசாரணையை முடித்து வைத்தனர்.
இந்த உத்தரவை அடுத்து இரண்டு அணி முகாமிலும் மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டது. ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் தங்கள் தரப்பு நிர்வாகிகளுடன் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, எம்.சி.சம்பத்
செம்மலை, எம்.சி. சம்பத், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கருப்பண்ணன், கே.வி.ராமலிங்கம், காமராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் தென்னரசு ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாகவும், உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, பொதுக்குழு உறுப்பினர்களிடம் மாவட்ட வாரியாக வேட்பாளர் தென்னரசுவுக்கான ஆதரவுக் கடிதம் பெற திட்டம் இபிஎஸ் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 2 நாட்களில் இப்பணியை செய்து, திங்கள் அன்று நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ,எப்பொழுதும் சோதனைகள் வந்தாலும் கூட தர்மம் நிச்சயம் வெல்லும் என தெரிவித்தார்.
மேலும் பேசியவர், "உச்சநீதிமன்றம் கூட இரண்டு தலைவர்களிடம் தொண்டர்களிடம் செல்லுங்கள், தொண்டர்கள் யாருக்கு தீர்ப்பு கொடுக்கின்றனரோ அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று சொல்லி இருக்கிறது. அந்த தொண்டர்கள் முழுவதும் கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருக்கின்றனர். தர்மம் எப்பொழுதும் வெல்லும் எனத் தெரிவித்தார்.
எல்லாம் சரிதான் பொதுக்குழு கூடி தேர்வு செய்யும் வேட்பாளரான தென்னரசுவை ஓ.பன்னீர் செல்வமும் அவரது ஆதரவாளர்களும் ஏற்றுக்கொள்வார்களா என்பதே கேள்வியாகும். நேற்றைய தினம் உச்சநீதிமன்ற உத்தரவு வெளியாகும் முன்னதாகவே தனது தரப்பு வேட்பாளர் செந்தில் முருகனை நல்ல நேரம் பார்த்து வேட்புமனுவை தாக்கல் செய்ய வைத்து விட்டார். அந்த வேட்பாளரை வாபஸ் பெற செய்வாரா என்றும் அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.