அடுத்த மூவ் என்ன? ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பரபர ஆலோசனை
ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை அதிமுக பொதுக்குழு மூலம் தேர்வு செய்யலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில், ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் என்றும் பொதுக்குழு எடுக்கும் முடிவை அவைத்தலைவர் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் இந்த பொதுக்குழுவிற்கு ஓ பன்னீர்செல்வம் மற்றும் நீக்கப்பட்டவர்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்கக் கோரியும் தனது கையெழுத்திட்ட வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பை அளித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி முடிவு
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இடைத்தேர்தலில் வேட்பாளர் யார் என முடிவு செய்ய பொதுக்குழுவை கூட்டாமல் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெற இபிஎஸ் தரப்பு திட்டமிடப்பட்டுள்ளது. குறுகிய காலமே உள்ளது என்பதால் அதாவது 2 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களை திரட்டுவது கடினம் என்ற நிலையில் இந்த முடிவினை எடப்பாடி பழனிசாமி தரப்பில் எடுத்துள்ளதாகவும், இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்பவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடிதத்தின் மூலம் கருத்து கேட்பார்
வரும் 7-ம் தேதி ஈரோடு கிழக்கில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். எனவே அதற்கு முன்பாக பொதுக்குழுவை கூட்டி உறுப்பினர்களிடம் நேரில் கருத்து கேட்க முடியாது என்பதால் தமிழ்மகன் உசேன் முன்வைத்து கடிதத்தின் மூலம் கருத்து கேட்பார் என்று தெரிகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பையடுத்து எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் இன்று மாலை ஆலோசனை நடத்தினார்.

இபிஎஸ் அவசர ஆலோசனை
ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று இருந்தனர். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்று இருந்தனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.எஸ் தென்னரசுவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

கே.எஸ் தென்னரசுவே மீண்டும் வேட்பாளரா?
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப் படி பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பொதுக்குழு கூட்டப்படலாம் என்று கூட அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் முடிய இன்னும் 4 நாட்களே எஞ்சியுள்ளது. இதனால், 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்து பொதுக்குழு கூட்டப்படுமா? அல்லது கடிதம் மூலமாக ஒப்புதல் பெறப்படுமா? என்பதும் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே ஆதரவாக அமைந்து இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது. இதனால், கே.எஸ் தென்னரசுவே மீண்டும் வேட்பாளராக பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications