பைக்கோடு வெள்ளத்தில் சிக்கிய நபர்.. மனித சங்கிலி அமைத்து காப்பற்றிய மக்கள்.. ஈரோட்டில் நெகிழ்ச்சி
ஈரோடு: ஈரோடு மாவட்டம் திருப்பூர் சாலை அந்தியூர் வெள்ளி பகுதியில் ரோட்டில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் பைக்கில் சென்றவர் சிக்கினார். இதை பார்த்த பொதுமக்கள் மனித சங்கிலி அமைத்து வெள்ளத்தில் சிக்கிய நபரை பத்திரமாக மீட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் குளுகுளு சீசன் நிலவி வருகிறது.
இதற்கு கொங்கு மண்டலத்தில் உள்ள ஈரோடும் விதிவிலக்கல்ல. ஈரோட்டு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

ஈரோட்டில் மழை-வெள்ளம்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மேலும் காவிரியில் அதிகளவில் வெள்ளம் வருகிறது. இதனால் பவானி, கொடிமுடி பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளன. ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். மேலும் தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பெய்த கனமழைக்கு வாழை மரங்கள் முறிந்தன. விவசாய நிலங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சூழ்ந்த தண்ணீரால் மக்கள் அவதி
இதுதவிர மாவட்டத்தின் பல இடங்களில் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் சென்றது. இதனால் பல இடங்களில் தற்காலிகமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் தங்களுடைய இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். ஈரோட்டில் மாவட்டத்தில் மழையால் அதிகமாக பாதிக்கப்பட்ட இடமாக அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் உள்ளன. அந்தியூர் வட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கடந்த 17 ம் தேதி ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தில் சிக்கிய நபர்
இந்நிலையில் தான் தற்போது ஒரு வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. திருப்பூர் சாலை அந்தியூர் வெள்ளி பகுதியில் கனமழையால் தரைப்பாலம், ரோடுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் ஒருவர் வெள்ளத்தில் சிக்கினார். அதாவது பைக்கில் வெள்ள நீரை கடந்து செல்ல முயன்ற அவர் நீரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினார். இதனால் அவர் வெள்ளத்தில் சிக்கினார். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக அவரை தண்ணீர் அடித்து செல்லவில்லை. பைக்குடன் அவர் வெள்ளத்துக்க நடுவே நின்றார்.

மனித சங்கிலியால் மீட்ட மக்கள்
இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அவரை காப்பாற்ற திட்டமிட்டனர். இதையடுத்து ஆண்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து மனித சங்கிலி அமைத்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் இணைந்து வெள்ளத்தில் பைக்குடன் சிக்கிய நபரை பத்திரமாக மீட்டனர். தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. துரித செயல்பாடு மற்றும் அனைவரும் ஒன்றிணைந்து மனித சங்கிலி அமைத்து வெள்ளத்தில் சிக்கியவரை மீட்டதை பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications