அடடே! இவ்வளவு மேட்டர் இருக்கா.. ஈரோட்டில் காங்.. வெற்றி திமுகவிற்கு எவ்வளவு முக்கியமானது?
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி, காங்கிரஸை விட திமுகவிற்கு மிகவும் முக்கியமானது என மூத்த பத்திரிக்கையாளர்கள் சொல்கிறார்கள்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி, காங்கிரஸை விட திமுகவிற்கு மிகவும் முக்கியமானது என மூத்த பத்திரிக்கையாளர்கள் சொல்கிறார்கள்.
ஏனெனில் அடுத்த நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியை வீழ்ந்த இந்த வெற்றி அடித்தளமாக இருக்குமாம். அத்துடன் இடைத்தேர்தலில் தோற்றால் ஆளும் கட்சியின் மீதான அதிருப்தியால் தான் இந்த வெற்றியை அதிமுக பெற்றதாக விமர்சனங்கள் எழும். அத்துடன் நாடாளுமன்ற தேர்தலை உற்சாகத்துடன் எதிர்கொள்ள பாஜக மற்றும் அதிமுகவிற்கு இந்த வெற்றி அடித்தளமாக இருக்கும் என்கிறார்கள் மூத்த பத்திரிக்கையாளர்கள்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது, இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன.

காங்கிரஸ் கட்சி
இந்த தேர்தலில் பிரதானமாக திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக பாஜக கூட்டணி சார்பில் தென்னரசும் போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெற்றிருந்தது. அதனால் கூட்டணி தர்மபடி, திமுக, காங்கிரஸ் கட்சிக்கே ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டுக்கொடுத்துவிட்டது. இதில் கடந்த முறை வெற்றி பெற்ற திருமகன் ஈவேரா அகால மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு போட்டியிட காங்கிரஸ் சீட் கொடுத்துள்ளது.

உதயநிதியும் செல்கிறார்
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற வைக்க, திமுக தீவிரமாக களம் இறங்கி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பிரச்சாரம் செய்ய உள்ளார். இதேபோல் உதயநிதி ஸ்டாலினும் செல்ல உள்ளார். திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி திமுகவிற்கு மிகவும் முக்கியமானது என்கிறார்கள். இது பற்றி மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறுகையில், திமுக காங்கிரஸ் கூட்டணி கடந்த நாடாளுமன்ற தொகுதியில் தமிழகத்தில் 38 தொகுதியில் வெற்றி பெற்றது. புதுச்சேரியிலும் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி ஒரே இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது.

எடப்பாடியும் தீவிரம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் பெறும் வெற்றிதான் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்கு அடித்தளமாக இருக்கும். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி எளிதாக வெற்றி பெறும் என்று அசால்டாக இருக்கக்கூடாது என ஸ்டாலின் திமுகவினரை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் அதிமுக இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போராடிய நிலையில், கடைசியில் கிடைத்தும் விட்டது. இதையடுத்து உற்சாகமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அனைவரையும் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட உத்தரவிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியே நேரடியாக களம் இறங்கி பிரச்சாரத்தை கண்காணித்து வருகிறார்.

காங்கிரஸ் வெற்றி
கடந்த முறை காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யுவராஜாவை 8904 வாக்கு வித்தியாசத்தில் தான் வென்றார். கடந்த முறை தமாகா (இரட்டை இல்லை சின்னத்தில் தான்) போட்டியிட்டது. ஆனால் இந்த முறை நேரடியாக அதிமுகவே போட்டியிடுகிறது. எனவே காங்கிரஸ் கட்சி கடுமையான சவாலை சந்திக்கும் என்று தெரிகிறது. எனவே இடைத்தேர்தலில் தீவிரமாக களப்பணியாற்ற திமுக அமைச்சர்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியை மிகப்பெரிய வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார்.

ஒத்திகை
இந்த தேர்தலை முதல்வர் ஸ்டாலின் சாதாரணமாக கருதவில்லை. ஏனெனில் ஒரு வேளை ஈரோடு கிழக்கு தொகுதியில் தோற்றால் அது திமுக ஆட்சியின் மீதான அதிருப்தியாக பாஜகவும் அதிமுகவும் முன்னிலைப்படுத்தும். அத்துடன் கொங்கு பகுதியில் அதிமுக மற்றும் பாஜகவே செல்வாக்கான கட்சி என்பது போல் ஆகிவிடும். மேலும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுகவிற்கு இந்த தேர்தல் ஒத்திகை போல் இருக்கும் என்பதால் மிகுந்த கவனமாக இருக்கிறது திமுக. எனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என்பது திமுகவிற்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது இவ்வாறு மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறினார்












Click it and Unblock the Notifications