கார் பிரேக்கில் கோளாறு.. ஓசூர் அருகே பயங்கர விபத்து.. மருத்துவ கல்லூரி மாணவர் உட்பட இருவர் பலி
ஒசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் உள்பட 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
கார் விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் 2 இளைஞர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கணிக்கோட்டையை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மகன் மஞ்சுநாத் மற்றும் பரத், வேதாந்து, கோகுல் ஆகியோர் நண்பர்கள். இதில் 22 வயதான மஞ்சுநாத் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மருத்துவக் கல்லூரி
ஒன்றில் டாக்டருக்கு படித்து வருகிறார். இவரது நண்பர்கள் கல்லூரி படிப்பை முடித்து வேலை தேடி வருகின்றனர்.

பெங்களூர் பயணம்
இந்நிலையில் நண்பர்கள் 4 பேரும் பெங்களூருவில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்கு நேற்று சென்றுள்ளனர். பின்னர் திருமணம் முடிந்து இன்று காலை சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்கள் சென்ற கார் ஒசூர் அருகே தண்டரை என்ற கிராமத்திற்கு வரும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் காரை உடனடியாக கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரமுடியவில்லை.

மரத்தின் மீது மோதிய கார்
சாலையில் தாறுமாறாக ஓடிய கார் அதிவேகமாக சென்று மரத்தின்மீது பயங்கரமாக மோதி நின்றது. இந்த கோர விபத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் டாக்டர் ஆகவேண்டிய மஞ்சுநாத் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பரான பரத்தும் விபத்தில் படுகாயமுற்று உயிரிழந்தார். விபத்து நடந்ததை பார்த்த கிராம மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

தீவிர சிகிச்சை
பின்னர் ஆம்புலன்ஸ்சுக்கும் தகவல் அளித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த, வேதாந்து, மற்றுமொரு நண்பர் கோகுல் ஆகியோரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது.

பெற்றோர் கண்ணீர்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேன்கனிக்கோட்டை காவல்துறையினர் மஞ்சுநாத், பரத் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இருவரின் பெற்றோர்களும் தகவல் அளிக்கப்பட்டது. மருத்துவர் கனவோடு எதிர்காலத்தை நோக்கி பயணித்த மகன் இறந்த செய்தியறிந்து வந்த பெற்றோர் கதறி அழுதனர்.

விபத்துக்கு உண்மையான காரணம்?
கார் கட்டுப்பாட்டை இழந்தது ஏன்? பிரேக் ஏதும் பிடிக்காமல் சென்றதா? அல்லது காரை ஓட்டியவர் குடிபோதையில் இருந்தாரா அல்லது வேறு ஏதேனும் வாகனத்தை முந்த முயன்றபோது விபத்து நிகழ்ந்ததா என்ற பல கோணங்களின் அடிப்படையில் தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications