அச்சுறுத்தும் குரங்கு அம்மை.. கேரளாவை தொடர்ந்து ஆந்திராவிலும் 2 வயது குழந்தையிடம் தென்பட்ட அறிகுறி
ஐதராபாத்: கேரளாவில் குரங்கு அம்மையால் ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் சவுதி அரேபியாவில் இருந்து ஆந்திரா வந்த 2 வயது பெண் குழந்தைக்கு குரங்கு அம்மை அறிகுறி தென்பட்டுள்ளதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video
கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது ஆந்திராவில் குழந்தை ஒன்றுக்கு குரங்கு அம்மை அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவல் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அமெரிக்கா, ஐரோப்பா உள்பட பல்வேறு நாடுகளுக்கும் குரங்கு அம்மை நோய் பரவ துவங்கியது.

60 நாடுகளில் குரங்கு அம்மை
இதையடுத்து தற்போது சுமார் 60க்கும் அதிகமான நாடுகளில் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனமும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. மேலும் குரங்கு அம்மை தொற்று தொடர்பாக ஒவ்வொரு நாடும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

கேரளாவில் ஒருவர் பாதிப்பு
இதனால் இந்தியாவிலும் குரங்கம்மை நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மத்திய அரசு அறிவுரைகள் வழங்கி உள்ளது. இந்நிலையில் தான் கடந்த 12ம் தேதி வளைகுடா நாட்டில் இருந்து கேரளா திரும்பிய 35 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானது. தற்போது அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தைக்கு அறிகுறி
இந்நிலையில் தான் தற்போது ஆந்திராவில் ஒரு குழந்தைக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு விமானத்தில் ஒரு குடும்பத்தினர் வந்தனர். மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது 2 வயது பெண் குழந்தைக்கு குரங்கு அம்மை அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையின் மாதிரி சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், குழந்தையின் குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கண்காணிப்பு
கேரளா, ஆந்திராவில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் நடக்கிறது. அதோடு குரங்கு அம்மை பாதிப்பு உள்ளதாக அறியப்பட்டுள்ள 63 வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு குரங்கு அம்மை பரிசோதனை நடத்தப்படுவதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications