Chandrayaan 3: சக்ஸஸ்.. நிலவின் சுற்றுப் பாதைக்குள் ‘சந்திரயான்-3’.. இஸ்ரோ கொடுத்த குட் நியூஸ்
ஐதராபாத்: நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் -3 விண்கலம், புவி வட்டத்தின் சுற்றுப்பாதையை நிறைவு செய்து விட்டு நிலவின் நீள்வட்டப் பாதையை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான்-2 என்ற விண்கலத்தை கடந்த 2019 ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்பு சந்திரயான்-2 2019 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப் பாதையை சென்றடைந்தது. இருந்த போதிலும், தொழில்நுட்பக் கோளாறால் திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது.

அதே நேரம் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து இஸ்ரோ ரூ.615 கோடியில் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆம் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி மதியம் 2.35 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது.
சந்திரயான் - 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், அது தனது இறுதி இலக்கினை அடைய பல்வேறு படிநிலைகளை கடக்க வேண்டியிருக்கிறது. அதாவது, நிலவை நோக்கி இந்தியாவின் சாதனைப் பயணத்தை செய்துகொண்டு இருக்கும் சந்திராயன் 3 விண்கலம் பூமியை நீள் வட்டப் பாதையில் 5 முறை சுற்றி வந்த பிறகு நிலவின் ஆர்ப்பிட்டுக்கு சென்று அதையும் நீள் வட்டப்பாதையில் சுற்றத் தொடங்கி தரையிறங்கும்.
அதன்படி, சந்திரயான் விண்கலன் புவி வட்டத்தின் இறுதி சுற்றுப் பாதையை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு, நள்ளிரவு 12 - 1 மணிக்குள் நிலவின் நீள் வட்டப் பாதையை நோக்கி விண்கலம் பயணிக்கத் தொடங்கியுள்ளது. சந்திரயான் விண்கலத்தின் மிக முக்கிய பயணம் இதுவாகும். நிலவுக்கும் பூமிக்கும் இடையேயான சராசரி தொலைவு சுமார் 3.8 லட்சம் கிலோ மீட்டர் ஆகும். ஒவ்வொரு நாளும், நிலவும் பூமியும் இருக்கும் இடங்களைப் பொருத்து இவற்றுக்கு இடையேயான தொலைவு மாறுபடும்.
தற்போது பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து வெளியேறி நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியிருக்கும் சந்திரயான் 3 விண்கலம் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் உந்தித் தள்ளப்பட உள்ள்ளது. அதன்பிறகு நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சந்திரயான் செல்லும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 5- ஆம் தேதியில் இருந்து 23 ஆம் தேதி வரை நிலவின் சுற்று வட்டபாதைக்குள் சந்திரயான் விண்கலம் பயணிக்கும். அதன்பிறகு ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 5.47க்கு நிலவில் மேற்பரப்பில் லேண்டர் தரையிறங்க உள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனையை இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications