கொரோனா பாதிப்பு.. பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்
ஹைதராபாத்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடன இயக்குநர் சிவசங்கர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 72.
கொரோனா தொற்று காரணமாக சிவசங்கர் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரால் மருத்துவமனை செலவுகளைக் கூட செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.
துரதிருஷ்டவசமாக அவரது மூத்த மகனும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிவசங்கர் மாஸ்டரின் மருத்துவ செலவுகளுக்கு நடிகர் தனுஷ் பண உதவி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காலமானார்
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தில் வெளியான மன்மத ராசா பாடலுக்கு சிவசங்கர் மாஸ்டர்தான் நடனம் அமைத்து கொடுத்தார். சிவசங்கர் மாஸ்டரின் சிகிச்சைக்கு இந்தி நடிகர் சோனு சூட்டும், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் உதவியுள்ளனர். இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக அபாய கட்டத்தில் இருந்து வந்த சிவசங்கர் இன்று இரவு 8.30 மணியளவில் காலமானார்.
சிவசங்கர் மாஸ்டர்
தேசிய விருது பெற்ற நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். தமிழில் வரலாறு, பரதேசி, தானா சேர்ந்த கூட்டம் , சர்கார் உள்ளிட்ட பல படங்களிலும் சில முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
சிவசங்கர் பிறப்பு
இவருக்கு பூவே உனக்காக படத்தில் நடன இயக்குநராக பணியாற்றியமைக்காக தமிழக அரசின் விருதும் வழங்கப்பட்டது. மகதீரா படத்திற்கு தேசிய விருது பெற்றார். பாகுபலி உள்ளிட்ட பிரபல பாடல்களுக்கான அவர் நடனம் அமைத்து கொடுத்துள்ளார். சிவசங்கர் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி பிறந்தார்.
Recommended Video
சிவசங்கருக்கு எலும்பு முறிவு
சென்னை பாரிமுனையில் பிறந்த சிவசங்கருக்கு அவரது 8-ஆவது வயதில் முதுகுதண்டு வடத்தில் முறிவு ஏற்பட்டு சிகிச்சைகளுக்கு பிறகு வீட்டில் இருந்தே படித்தார். பின்னர் 1974 ஆம் ஆண்டு நடன இயக்குநர் சலீமுக்கு உதவியாளராக சேர்ந்தார். சிவசங்கருக்கு சுகன்யா என்ற மனைவியும் விஜய் சிவசங்கர், அஜய் சிவசங்கர் என்ற இரு மகன்களும் உள்ளனர்.