இலவசங்களை எதிர்ப்பது பாஜக.. 'ஃப்ரீ' மின்சாரத்தை எதிர்பார்த்த காலம் மறைந்துவிட்டது.. குஜராத்தில் மோடி
அகமதாபாத்: இலவச மின்சாரம் என்ற வாக்குறுதி குஜராத்தில் முக்கிய கோஷமாக ஒலித்து வரும் நிலையில், பிரதமர் மோடி இலவச மின்சாரம் கோரும் காலம் மறைந்துவிட்டதாகவும் சோலார் மின்சக்தி மூலமாக மக்கள் வருமானம் ஈட்ட தொடங்கியிருப்பதாக தேர்தல் பிரசாரத்தின் போது பேசினார்.
குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருவார காலமே உள்ளது. டிசம்பர் 1 ஆம் தேதி 89 தொகுதிகளுக்கும் 5 ஆம் தேதி 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
குஜராத்தில் 27 ஆண்டு காலம் ஆட்சியில் உள்ள பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது.
குஜராத் தேர்தல்.. “ஷாக்” ரிசல்ட்! உயர்ந்த “கிரிமினல் பேக்ரவுண்ட்” வேட்பாளர்கள்! முதலிடம் எந்த கட்சி?
குஜராத்தில் ஆட்சியை பிடிக்க
மறுபக்கம், இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்து கால்நூற்றாண்டு கால ஏக்கத்துக்கு முடிவு கட்டுவதில் தீவிரமாக காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. அதேபோல், பஞ்சாபில் ஆட்சி அமைத்த உற்சாகத்துடன் ஆம் ஆத்மி கட்சியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கிறது. இதனால், குஜராத் தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இலவச மின்சாரம்
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ராகுல் காந்தியும் கடந்த திங்கள் கிழமை பிரசாரம் செய்தார். அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், ஆம் ஆத்மியின் கெஜ்ரிவாலும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்பதை தங்களது தேர்தல் பிரசாரத்தில் பிரதானமாக முன்வைத்து உள்ளது.
300 யூனிட்கள் வரை
இதனால், குஜராத் சட்டமன்ற தேர்தலில் இலவச மின்சாரம் என்ற வாக்குறுதி முக்கியத்தும் பெற்றுள்ளது. டெல்லி, பஞ்சாபை போன்று குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால் 300 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். அதேபோல், காங்கிரசும் தங்கள் தேர்தல் அறிக்கையில் இலவச மின்சாரம் பற்றி கூறியிருக்கிறது.
எனக்கு மட்டுமே தெரியும்
இந்த நிலையில், இன்று குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் பிரசாரம் செய்து கொண்ட பிரதமர் மோடி, மின்சாரத்தை இலவசமாக பெறுவதற்கு பதிலாக மின்சாரத்தில் இருந்து வருமானம் பெறுவதற்கான தருணம் இது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:- மின்சாரத்தில் இருந்து வருமானம் பெறுவதற்கான கலை எனக்கு மட்டுமே தெரியும்.
சோலார் மேற்கூரை அமைத்து
இலவசமாக மின்சாரம் பெறுவதை விட வீட்டின் மேற்பகுதியில் சோலார் அமைத்து அதில் கிடைக்கும் அதிகப்படியான மின்சாரத்தில் மூலம் குஜராத் மக்கள் வருமானம் பெறுவதையே நான் பார்க்க விரும்புகிறேன். மோதிரா கிராமம் முழுவதும் சோலார் மேற்கூரை அமைத்து அதில் இருந்து மின்சாரம் பெறுவதை நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். தங்கள் தேவைக்காக மின்சாரத்தை பயன்படுத்தும் அந்த கிராம மக்கள், கூடுதலாக உள்ள மின்சாரத்தை அரசுக்கு விற்பனை செய்கிறார்கள்.
வருமானம் ஈட்ட முடியும்
இந்த நடைமுறையை குஜராத் முழுவதும் கொண்டு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த நடைமுறையின் மூலம் கூடுதலாக கிடைக்கும் மின்சாரம் மூலம் நீங்கள் வருமானம் ஈட்ட முடியும். சோலார் மூலமாக மின்சாரம் மலிவாக கிடைப்பதால் பிரிட்ஜ், ஏசி போன்றவற்றை வாங்க திட்டமிட்டு இருப்பதாக மோதிரா கிராமத்தை சேர்ந்த பெண்மணி என்னிடம் தெரிவித்தார். இந்த புரட்சியை குஜராத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று நான் உழைத்துக்கொண்டு இருக்கிறேன்.
அந்த காலம் மறைந்து விட்டது
விவசாயிகளும் தற்போது சோலார் பேனல்கள் மூலமாக மின்சாரம் பெற தொடங்கியுள்ளனர். கூடுதலாக கிடைக்கும் மின்சாரத்தை விவசாயிகளும் விற்பனை செய்து வருமானம் ஈட்ட தொடங்கியிருக்கிறார்கள். குறைந்த விலையில், மின்சாரம் வேண்டும் என கோரிய காலம் மறைந்து விட்டது. இன்று, மின்சாரத்தை விற்பதன் மூலமாக நீங்கள் வருமானம் ஈட்ட முடியும்" என்றார்.